Sunday, April 29, 2007

இன்னும் 30 ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் கடலுக்குள் மூழ்கிவிடும்!

"எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்களில் இல்லாமல் போக்கூடிய மண்ணுக்காக (சிங்கள)அரச படைகளும் விடுதலைப்புலிகளும் அடிபட்டுச் செத்து மடிகின்றனர்" என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே.["Government troops and the LTTE fighting over land in the north and the east that may soon not even be there."]

பேராசிரியர் மோகன் முனசிங்கே அவர்கள் ஐக்கிய நாடுகள்[ஐ.நா] சபையின் Intergovernmental Panel on Climate Change (IPCC) எனும் அமைப்பின் உப-தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடல் நீரின் மட்டம் அரை மீற்றரால் உயருகின்றது, வறண்ட பகுதிகள்[dry zone] மேலும் வறண்ட பிரதேசங்களாகவும் குளிர்மையான பிரதேசங்கள்[wet areas] மேலும் குளிர்மையான பிரதேசங்களாகவும் மாறி வருகிறது. இதனால் குளிர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்குகளும், வறண்ட பகுதிகளில் வறட்சிக் கொடுமைக்கும் வழிவகுக்கும். சூழலில்[atmosphere] அதி கூடிய வெப்பநிலையால் [Higher temperatures] தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடையும்.

நாட்டின்(இலங்கை)சுகாதார நிலமைகள் மிகவும் மோசமடையும். வறண்ட பிரதேசங்களில் இருந்து நுளம்புகள் குளிர்ப்பகுதிகளுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். இதனால் இக் குளிர் பிரதேசங்களில் மலேரியா, டெங்கே[dengue] சிக்குன்னியா[chikungunya] போன்ற நோய்கள் பரவும்.

என்ன பயமாக இருக்கிறதா? இதோ இன்னும் சில :

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் [தமிழர்களின் தாயகம்] உள்ள பல கரையோரப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலில் மூழ்கிவிடும்.

பேராசிரியர் மோகன் முனசிங்கேயின் கருத்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின்[hardliners] கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்[...comments that are certain to draw the attention of hardliners from both sides of the warring fence]


மேலே உள்ள தகவல்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸின்[The Sunday Times] இவ்வார இதழில் [Sunday, April 29, 2007] வெளிவந்தவை. பூமியின் உஷ்ணமே[global warming] இவ் அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே. இவர் இவ் விடயத்தை மிகவும் மிகைப்படுத்துகிறாரா? அல்லது உண்மையாகவே சில தமிழ்ப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கப்போகிறதா என்பது எனக்குத் தெரியாது. யாராவது இத் துறையில் உள்ள வல்லுனர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கள் இலங்கை அரசியல்வாதிகளிடையேயும் மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதுதான் என் கவலை.
எனது அச்சம்?!!!! ஈழத்தில் நான் பிறந்த மண்[ஊர்] ஒரு கரையோரக் கிராமம். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" இருந்த என் கிராமமும் கடலில் மூழ்கிவிடுமோ என்பதும் என் அச்சங்களில் ஒன்று.

Saturday, April 28, 2007

மாமனிதர் சிவராம் [தாராக்கி] நினைவாக...

"இவர் தனது எழுத்துக்களால் தமிழரின் தேசியப் பிரச்சினையை உலக அரங்கிலே மிகவும் நேர்த்தியான முறையில் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்ற அப்பட்டமான பொய்ப்பரப்புரைகளை சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் மிகச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் அம்பலப்படுத்தினார். சிங்களப் பேரினவாத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபோதும், அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துநின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மக்களுக்கு ஓயாது அரசியல் விழிப்புணர்வூட்டி, தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார். அன்னார் ஆற்றிய பணி என்றுமே போற்றுதற்குரியது.

திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும்,விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும், தான் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மாமனிதர் சிவராம் அவர்களே சொல்லக் கேளுங்கள்[கீழே].


நீ விட்டுச் சென்ற பணி தொடரும்

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி
உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி
உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்
உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு
உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது
உன் இனமானம் வானை விட உயர்ந்தது
உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீரூற்றியது
உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!
உன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து
உன் கருத்துக்கு எதிர்க்கருத்து
உன் வாதத்துக்கு எதிர் வாதம்
முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்
உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே
நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே
உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழாது
என் மண் என்மக்கள் என் இனம்
என நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!
உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை
என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!
அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்
எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை
பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் தெளிவு!
அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!
உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்
என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடலைத்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது
உன் உயிரைத்தான் பகைவர்களால் பறிக்க முடிந்தது!
உன் கருத்துக்களை யாருமே அழிக்க முடியாது!
உன் நினைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!
அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!
என் எழுத்து கோல் மேல் ஆணை!
உன் ஆசைக் கனவுகளை நனவாக்குவேன்! நீ
சென்ற பாதையில் என் கால்கள் செல்லும்
நீ விட்டுச் சென்ற பணி தொடரும்!


இக் கவிதை திருமகள் என்பவரால் எழுதப்பட்டது. www.tamilnation.org எனும் இணையத்தளத்திலிருந்து இக் கவிதை எடுக்கப்பட்டது.

Tuesday, April 24, 2007

மூளைக்குச் சவால் : ஒரு புதிர்

கீழே உள்ள ரோமன் இலக்கச் சமன்பாடு பிழையானது. ஆனால் அச் சமன்பாட்டில் உள்ள ஒரே ஒரு குச்சியை/துண்டை[matchstick] மட்டும் இடம் மாற்றுவதன் மூலம் அச் சமன்பாட்டைச் சரியாக்கலாம். எந்த குச்சியை/துண்டை[matchstick] இடம் மாற்ற வேண்டும்?


matchstick க்கு என்ன தமிழ்? மேலே உள்ள என் தமிழ் விளங்காவிட்டால் கீழே அப் புதிரை ஆங்கிலத்திலும் தருகிறேன்.


The Roman numeral equation below is incorrect, but by moving just one of the matchsticks, it can become a correct equation. Which one needs to be moved?


சமன்பாடு - Equation :
IV = III - I

Monday, April 23, 2007

சிங்கள விமானப்படைத் தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலியில் அமைந்திருக்கும் சிங்கள விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் இத் தாக்குதலில் சிங்களப் படைகளுக்குப் பலத்த சேதம் விளைவித்துள்ளதாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளார் இளந்திரையன் கூறியுள்ளார்.

இது பற்றி தமிழ்நெற்றில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


கீழுள்ள பந்தி EST 22:15 PM க்கு இணைக்கப்பட்டது.

சிறீலங்கா விமானப்படைப் பேச்சாளர் தளபதி அஜந்தா சில்வா[Capt. Ajantha Silva ] அவர்கள், விடுதலைப்புலிகள் எந்தவொரு விமானத் தாக்குதல்களையும் பலாலி விமானப்படைத்தளம் மீது நடத்தவில்லை என்றும் ஆட்டிலெறிகள் மூலமே அவர்கள் தாக்குதலை நடாத்தியதாகவும் சேத விபரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அசோசியற் பிறஸ்[The Associated Press] செய்தித் தாபனத்திற்குச் சொல்லியுள்ளார்.

அச் செய்தியைப் படிக்க இங்கேகிளிக் செய்யவும்


இத் தாக்குதல் தொடர்புடைய சில செய்திகள்:

பலாலி இராணுவத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்
Sri Lanka's Tamil Tigers bomb air base in north
Tamil Tigers 'launch air strike' : BBC
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

Sunday, April 22, 2007

இவ் வார சிறந்த பதிவுகள்

"இவ் வார சிறந்த பதிவுகள்", இந்தத் தலைப்பு சும்மா பரபரப்புக்காக வைக்கப்பட்டது. ஒவ்வொருவரின் வாசிப்பு இரசனையும் வேறுபட்டது. எனக்குச் சிறந்த பதிவாகத் தென்படும் பதிவு இன்னொருவருக்கு குப்பைப் பதிவாகத் தெரியலாம். அத்தோடு தமிழ்மணத்தில் வரும் முழுப்பதிவுகளையும் நேரமின்மை காரணமா வாசிக்க முடிவதில்லை.எனவே வரும் முழுப்பதிவுகளையும் வாசிக்காமல், இவைதான் சிறந்த பதிவுகள் என்பது நீதிக்குப் புறம்பானது. ஆக, இந்த வாரம் நான் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவுகள் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை இங்கே பட்டியலிடுகிறேன். இப் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்துவிட்டு அங்கே உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதி அப் பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

சும்மா எழுந்தமானமாகப் பதிவுகளை வரிசைப்படித்தியுள்ளேன். எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை.

மிக்க நன்றி.
  1. கவிதைகள்
    1. சகோதரிக்கு...
    2. புனிதமற்ற காசி!
    3. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!
    4. இன்ப வதை...
    5. காலங்கள் தந்த ஏமாற்றங்கள்
    6. நம்பாதீர்கள் மஹாஜனங்களே
    7. சிவன் வந்தான்
    8. கருவறை
    9. எழுதிவிட முடியாத ஒரு கவிதை
    10. தனிமையின் குரல்
    11. சீர்திருத்தங்கள்!
  2. அனுபவம்
    1. அவதானம்
    2. சல்லி அம்மனும் கடல் அம்மாவும்"
    3. வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2
    4. வாழ்வென்பது வண்ணங்கள்
    5. வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா
    6. அடுத்து என்ன?
  3. வரலாறு
    1. சோழர்களின் பொருளாதாரப் போர்கள்
    2. அன்னை பூபதி
    3. ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்
    4. சேகுவேரா --- வரலாற்றின் நாயகன் - 3
  4. ஆன்மீகம்
    1. செல்போனும் ஆன்மீகமும்
    2. வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)
  5. ஒலி/ஒளி
    1. உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007
    2. ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
    3. நீங்கள் கேட்டவை - பாகம் 2
    4. பூபதித்தாய் அவள் போதித்தாள்
    5. உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?
  6. சமூகம்
    1. தம்மின் மெலியாரை நோக்கி
    2. தாலி பாக்கியம் நிலைக்க வேண்டி, குழந்தைகள் கழுத்தில் தாலி மற்றும் நகைகளை அணிவித்த கொடுமை.
  7. கருத்து
    1. நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு
    2. ஐப்பீ
    3. கானா பிரபாவுக்கு - HATS OFF!!!
    4. படலைக்கு படலை
    5. ஐப்பீ

Saturday, April 14, 2007

கனேடியப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.


இன்று தமிழ்-சிங்கள புத்தாண்டு தினம். இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்க்கனேடியர்களுக்கு கனடாவின் பிரதமர் மேதகு ஸ் ரீபன் காபர் [Hon. Stephen Harper]அவர்கள் தனது சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாழ்த்துச் செய்தியை பெரிதாக்கி வாசிக்க கீழுள்ள வாழ்த்துச் செய்தியில் கிளிக் செய்யுங்கள்.



படம், தகவல் : தமிழ்க்கனேடியன்

Friday, April 13, 2007

யாழ்ப்பாண அரச குடும்பத்தின்[Royal Family of Jaffna] இணையத்தளம்

யாழ்ப்பாணப் பேரரசு போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்டதாக வரலாறு. யாழ்ப்பாணப் பேரரசின் கடைசி மன்னன் சங்கிலியன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் தான் நான் அறிந்த யாழ்ப்பாண வரலாறு.

கோவா அப்போது போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

யாழ்ப்பாண மன்னர்கள் தங்களின் பெயரோடு "ஆரியச்சக்கரவர்த்தி" எனும் சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். யாழ்ப்பாண அரசின், அதாவது இந்த "ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது.

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்[The Official Website of The Royal Family of Jaffna ] என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Remigius Kanagarajah என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுளது.

இவர்கள் இப்போது நெதர்லாந்தில் [The Netherlands ] வசிக்கிறார்களாம்.

தான் ஏன் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்கிறேன் என்பதை இப்படிச் சொல்கிறார் திரு. கனகராஜா:

"Although the Kingdom of Jaffna was destroyed by the Portuguese by 1621, it still exists through me, my family and other existing descendants of the Royal Family of Jaffna. The reason I am coming forward now to claim this succession is grounded in the need to prove to the younger generation and the world that there was once a strong Kingdom in Jaffna."
மேலே உள்ள பந்தியின் தமிழாக்கம்.
"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"

தமது முன்னோர் இராமேஸ்வரத்தில் வாழ்ந்த கங்கா வம்சத்தினர் எனவும், பின்னர் அவர்கள் பிராமணர்களுடன் திருமணங்கள் செய்து கொண்டதால் "ஆரியர்" எனும் அடைமொழியைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கனகராஜா.

சரி, நீங்களும் அந்த இணையத்தளத்தைப் பார்க்க/படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, April 08, 2007

இலங்கை எங்கே போகிறது? -- ஒரு பேட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி.


கேள்வி: இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஊடகத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் இன்று அங்குள்ள நிலைமை என்ன?

பதில்: உண்மையை எழுதுகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. உண்மையை எழுதும், அரசாங்கத்தை, அரச படைகளை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் பத்திரிகை தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு சட்டநேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும். கைத்தொலைபேசி, இன்ரநெற் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவ்வாறு மிக மோசமான அபாயகரமான சூழலில் ஊடகவியலாளர் உள்ளனர்.

கேள்வி: கொழும்பில் ஊடகவியலாளர் பரமேஷ்வரி மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மூவரும் கடத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களை கடத்தியது சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு என்பதை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. கடத்தல் என்பது ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு எதிராக சுதந்திர ஊடக அமைப்பு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

பதில்: பரமேஷ்வரி கடத்தப்படவில்லை, அவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிப்பதற்காக சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தோம். அவர் இப்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

தொழிற்சங்கவாதிகள் மூவரை கடத்தி 24 மணிநேரத்தின் பின்தான் அவர்களைக் கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. சிறிலங்கா அரசாங்க படைகளும் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏனைய தொழிற்சாங்க வாதிகள் மூவரின் கடத்தல் மற்றும் கைது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேள்வி: இந்த கடத்தல்களுக்கான காரணம் என்ன?

பதில்: பல காரணங்கள் இருக்கலாம். இரகசியமாக கைது செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களை தொடர்ந்து விடுவிக்காமல் வைத்திருப்பதற்காக, வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். இந்த கடத்தல்களில் அரசாங்கப் படைகள் மட்டுமல்ல சில குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையில் நிலைமை என்பது படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. யார் யார் என்ன நோக்கத்திற்காக கடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் பணம் பறிப்பதற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவதாக சொல்கிறார்கள். சிலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலருக்கு என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறது.

இந்த கடத்தல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இந்த கடமையை செய்யாமல் கடத்தல்காரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் இதைப்பற்றி பேச அஞ்சுகிறார்கள். பத்திரிகைகள் இதை எழுத அஞ்சுகின்றன. தங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என எல்லோரும் வாயடைத்துப்போய் இருக்கிறார்கள். இதனால் அராஜகம் அதிகரித்து விட்டது.

கேள்வி:இந்த போரைப்பற்றி சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: பெரும்பாலான சிங்கள மக்கள் இந்த போரில் அரசாங்கம் வெல்லும் என நினைக்கிறார்கள். முன்னர் இருந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து யுத்தத்தில் வெற்றி அடையும் என நினைக்கிறார்கள். ஆனால் யுத்தத்தில் யாரும் வெல்லப்போவதில்லை என்ற உண்மையை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

கேள்வி:அரசாங்கம் போரில் வெல்லும் என சிங்கள மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ஒன்று அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் செய்கின்ற பிரசாரம்.இரண்டாவது கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி அங்கு விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை போன்ற காரணங்கள்தான் சிங்கள மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் என நினைக்கிறேன். முக்கியமாக பிரசாரம்தான் காரணம்.

வாகரை மற்றும் மட்டக்களப்பு செய்திகளை பார்த்தால் அங்கு எல்.ரி.ரி.ஈ.யின் கதையே முடிந்திருக்க வேண்டும். அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை, சிங்கள ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கணக்கு பார்த்தால் கிழக்கில் ஒரு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் கூட இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றும். சிங்கள மக்களுக்கு உண்மையில் இந்த போர் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைப்பதில்லை.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் என்ன நினைக்கிறது?

பதில்: அரசாங்கம் இந்த போரில் தாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முதல் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை முற்றாக தோற்கடித்து அழித்து விடலாம் என நினைக்கிறது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தோற்கடித்து விட்டால் தான் விரும்பிய ஒரு தீர்வு திட்டத்தை வைக்கலாம் என அரசாங்கம் நினைக்கிறது.

கேள்வி:அப்படியானால் அடுத்து என்ன நடக்கப்போகிறது?

பதில்: நிச்சயமாக அங்கு பெரியதொரு போர் ஒன்று நடக்கப்போகிறது. சமாதானப்பேச்சு வார்த்தை என்பதற்கான சாத்தியமே இல்லை. இரு தரப்புமே போருக்கு தயாராகி விட்டார்கள். கடந்த காலத்தில் நடந்ததை விட மிக உக்கிரமான போர் நடக்கலாம். பல அழிவுகள் ஏற்படலாம். அவை பெரும் அதிர்ச்சி தரும் அழிவுகளாக இருக்கலாம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏதாவது ஒரு தரப்பு சில சமர்களில் வெல்லலாம். சில வேளைகளில் அரசாங்கம் சில சமர்களில் வெல்லலாம், ஆனால் இந்த போரின் மூலம் மக்களை வெல்லமுடியாது.

அரசாங்கம் உண்மையாகவே நாட்டில் பிரச்சினைத் தீர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கும் அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்கி சுமுகமான தீர்வை கொண்டுவரவேண்டும் என விரும்பினால் போரை உடனடியாக நிறுத்தி விட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணவேண்டும். அதைவிடுத்து போரை நடத்திக்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலை.

கேள்வி: அப்படியானால் இனி சமாதான பேச்சுவார்த்தை அமைதி முயற்சி என்பதெல்லாம் தோற்றுப்போன விடயம் என்கிறீர்களா?

பதில்: என்னைப்பொறுத்தவரை நாடு போகிற போக்கை பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது கஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இரு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி அதிகரித்துக்கொண்டு போகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை அமைதி வழியில்தான் தீர்க்க வேண்டும் என்கிறோம். எங்களுக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அன்பாக பழகுகிறோம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இரு சமூகங்களிலும் இருக்கிற இளைய தலைமுறை என்ன சொல்கிறது, போரைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள். இனிவரும் காலத்தை கற்பனை பண்ணிபார்க்கவே முடியாமல் இருக்கிறது. அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்று சொல்கிறது. அந்த ஐக்கிய இலங்கை என்பதை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து செல்கிறது.

கேள்வி:அப்படியானால் நாடு இரண்டாக பிரிந்து விடும் என்கிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கும் போது தமிழ் அரசுக்கான சந்தர்ப்பம் குறைவாகவே தெரிகிறது. பூகோள அரசியல் நலன்கள் காரணமாக தமிழ் அரசு அமைவதற்கு தடையாக சில விஷயங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சிங்களவர்களும் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க கூடிய சமஷ்டி அதிகாரத்தை வழங்கும் வாய்ப்பும் இல்லை. சிங்களவர்கள் மாகாணசபை முறையை வழங்கினால் போதும் என நினைக்கிறார்கள். சிங்களவர்களைப்பொறுத்தவரை மாகாணசபைக்கு மேல் ஒரு துளிகூட சிந்திக்க தயாராக இல்லை.

தமிழர்களைப்பொறுத்தவரை பூரண அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சிக்கு கீழ் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


இச் செவ்வி கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது [சித்திரை 08,2007]. நன்றி தினக்குரல்.

Tuesday, April 03, 2007

சோசலிஸம் எனும் மோச[லிச]ம் --- கவிதை

சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்
சோற்றுக்குப் பஞ்சமடா! - இங்கு
பேசும் இஸமெல்லாம் பாட்டாளி வாயில்மண்
போடும் இஸங் களடா!

பிற்போக்குக் காரர்களால்
பின்தள்ளப் பட்டீர்கள்
முற்போக்குக் காரர் நாம்
முறியடிப்போம் இன்னல் என்றார்.

எப்போக்குக் காரர் வந்தும்
இன்னல் களையவில்லை
துன்பம் தொலையவில்லை
துயர்க்கதையோ முடியவில்லை

எத்தனையோ பேர்கள் வந்தார்கள்
எதையெதையோ சொன்னார்கள்
மெத்தையிலே உன்னை வைத்து
மேன்மையுறச் செய்வோமென்று
அத்தனையும் நம்பியுள்ளம்
ஆசையுடன் தொலையவில்லை...

மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்ப மாடி
மாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்கு கூறி
கண்ணெதிரே கொடுமை கண்டும் கற்சிலையாய் மாறி
காரேறிப் பவனிவரும் கனவான்கள் கூட்டம்
உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீ
ஓர் நிமிடம் சிந்தித்தால் உன்வாழ்வு மலரும்
புண்ணதனில் வேல்பாய்ச்சப் பொறுத்திருப்ப தோடா?
பொங்கியெழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!

இக் கவிதை வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான குறிஞ்சித் தென்னவன்.

"நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் V.S.வேலு என்பதாகும். 'துயரம் தோய்ந்த குடும்பச் சூழலிற் பிறந்து, அச் சூழலியே இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்' என அவரே கூறுவார். இவர் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரையே கற்றவர். 1934ம் ஆண்டு பிறந்த இவர் 1946ம் ஆண்டில் வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தோட்டத் தொழிலாளியாகவே தமது வாழ்வை மேற்கொண்டு, இன்றுவரை முதுமையடைந்த நிலையிலும் தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்."
[பேராசிரியர் க. அருணாசலம். மலையகத் தமிழ் இலக்கியம். பேராதனைப் பல்கலைக்கழகம். பக்.140, 141,147]

Sunday, February 04, 2007

இலங்கையின் 59 வது சுதந்திர தினம் : ஒரு மீள் பார்வை

இன்று, மாசி[Feb ] 4, இலங்கையின் 59 வது சுதந்திர தினம். சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாகக் கொண்டாட முடியாத நிலையில் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சும்மா ஒரு சம்பிரதாயச் சடங்குகள் போல் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையை பல சமூகங்களைக் கொண்ட நாடாக கட்டியெழுப்ப அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள்.

தமிழ்மக்கள் இலங்கையின் சுதந்திர தினம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இத் தினத்தில் ஈடுபாடும் இல்லை. இலங்கையைக் கட்டியெழுப்பியவர்களில் முக்கியமான பங்கு வகித்தவர்கள் தமிழர்களாக இருந்த போதும், சுதந்திரம் அடைந்த பின் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழ்மக்களை இரண்டாம்தரக் குடிகளாகவே நாடாத்தி வந்தனால் தமிழ்மக்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணித்தே வருகின்றனர்.இலங்கைக்கு சுதந்திரம் வேண்டும் எனும் எண்ணத்தில் முதன் முதலில் இலங்கை தேசிய காங்கிரஸை [Ceylon National Congress] உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டவர் சேர். பொன். அருனாசலம்[Sir. Pon. Arunachalam].

BBC செய்தியாளர் Christoper Thomas தமிழ்மக்களின் சுதந்திர தினப் புறக்கணிப்பை இப்படிச் சொல்கிறார்:

"Sinhalese equate Sinhala nationalism with Sri Lankan nationalism. The one calamitous decision that led to the ethnic war was the Sinhala-only legislation of 1956, which lifted recognition of Tamil as an official language. After that blow, the uncertain desire for a separate Tamil homeland became a passionate one... Tamils, 18 per cent of the population, mostly feel uninvolved in this week's events. The art of the nation-building, like art of displaying sensitivity towards an aggrieved and alienated people, has yet to be perfected."

சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த இலங்கையின் வரலாற்றை அறிந்தவர்கள் இன்றைய இலங்கையைப் பார்த்து மனவேதனையுடன் பரிதாபப்படும் நிலையிலேயே உள்ளது.

இந்துசமுத்திரத்தின் முத்து[Pearl of the Indian Ocean], ஆசியாவின் புலி[Asian tiger] எனவெல்லாம் புகழப்பட்ட இலங்கை எப்படித் தடம் புரண்டது?

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது, ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்தபடியாக மக்களின் வாழ்க்கைத்தரத்தில் சிறந்த [highest living standard ] நாடாக இலங்கை விளங்கியது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் [இரண்டாவது உலக மகாயுத்தத்தால்] ஜப்பான் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. அக் காலப் பகுதியில் ஆசியாவின் பொருளாதாரப் புலி என அழைக்கபட்ட நாடு இலங்கை. அன்று ஒரு இலங்கை ரூபா ஆக மூன்று ஸ்ரேலிங் பவுன்ஸ்[Sterling Pound] மட்டுமே.

இரண்டாவது உலக மகாயுத்தக் காலகட்டத்தில் பிரிட்டன் இலங்கையிடம் கடன் [Foreign Aid]வாங்கியது என்றால் நம்புவீர்களா? ஆம், பிரிட்டனுக்கே இலங்கை கடனுதவி [Foreign Aid] அளிக்கக் கூடிய அளவில் அதன் பொருளதார வளர்ச்சி இருந்த்து. சிறந்த கல்வியமைப்பு [Education system ]மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரம்[[highest living standard ] போன்றவற்றைப் பல நாடுகள் புகழ்ந்து பாராட்டின.

ஆசியாவிலேயே அதிகம் எழுதப் படிக்கத் தெரிந்த மக்களைக்[99.7%] கொண்ட நாடுகளில் இலங்கை முதலாவதாகத் திகழ்ந்தது. உலகின் பல பாகங்களிலிருந்தும் இலங்கையில் படிப்பதற்காக மாணவர்கள் வருவது சகஜமாக இருந்தது. பல நாடுகளால் இலங்கையின் கல்வித தரம் மிகவும் போற்றப்பட்டது. இலங்கையில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்ற பல ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளுக்கும் [வையித்தியர், பொறியியலாளர், ஆசிரியர்கள்] சென்று தொழில் வாய்ப்புக்களை 1915 களில் இருந்தே பெற்றனர். சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பிகள் அல்லது சிங்கப்பூரின் தந்தைகள் என்று அழைக்கப்படுமளவுக்குப் புகழ் பெற்றவர்களில் ஒருவர் சின்னத்தம்பி இராஜரத்தினம். இவர் சிங்கப்பூரின் துணைப்பிரதமராக இருந்தவர். சிங்கப்பூர் உருவாகியதில் இருந்து பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரே.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் Lee Kwan Yew அவர்கள் சிங்கப்பூரை இலங்கை போல் கட்டியெழுப்ப வேண்டும் எனும் கனவுடன் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என அவர் சொன்னதாகச் சொல்வார்கள். இலங்கை பற்றிய தனது அனுபவத்தை அவரது சுயசரிதப் புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார் Lee Kwan Yew:

"My first visit to Sri Lanka was in April 1956 on my way to London...I walked around the city of Colombo, impressed by the public buildings…Ceylon had more resources and better infrastructure than Singapore...Ceylon was Britain's model Commonwealth country. It had been carefully prepared for independence. After the war, it was a good middle-size country with fewer than 10 million people. It had a relatively good standard of education, with 2 universities of high quality, a civil service largely of locals, and experience in representative government starting with city council elections in the 1930s. When Ceylon gained independence in 1948, it was the classic model of gradual evolution to independence."

உலக வங்கியின் தென் ஆசியப் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் Mieko Nishimizu அவர்கள் ரோக்கியாவில் நடந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங்கை பற்றிய தன் எண்ணங்களை இப்படிச் சொல்கிறார்:

"When I came to the World Bank, I was shocked to find Sri Lanka listed among the low-income developing countries in the World Bank Atlas. I grew up, in Japan, thinking of Sri Lanka as a developed nation, with a reverence one naturally holds for the cultural and historical heritage of an advanced civilization.

My own mental picture of Sri Lanka was suffused with impressive bits of information. Let me share with you some of those mental brushstrokes.

  1. A nation that boasts one of the oldest, if not the oldest, written history in the world.
  2. One of the first countries in the world to introduce universal adult franchise – in 1931, two years after Britain and nearly 20 years before India.
  3. A tradition of democratic governance right down to the village level, with elected village and town councils accountable to the people, as early as in the 1930s.
  4. A nation who produced the world's first lady Prime Minister, in 1960s.
  5. A people with among the best socioeconomic indicators in all of Asia – be it life expectancy, infant and maternal mortality, literacy, near universal primary school enrolment, etc.
  6. Jaffna College, dating back to 1819, and the American missionaries who founded it, where Malaysian, Singaporean, South Indian and even Japanese students were enrolled as early as the 1930s and 1940s.
  7. The Observer out of Colombo founded in 1934, a national newspaper still in circulation today, and the Morning Star out of Jaffna in 1841.
  8. The Ceylon Chamber of Commerce, the world's oldest such chamber dating back 164 years, and thriving today
  9. And, Lee Kuan Yew's pronouncement that he wanted Singapore to be like Sri Lanka, when he visited the island in the 1950s.

These are just a few brushstrokes of a nation called Sri Lanka, of a people of deep political awareness."

இப்படி கல்வியறிவு கொண்ட மக்கள், சிறந்த பொருளாதாரம் எனத் திகழ்ந்த நாடு, எப்படி இன்று உருப்படாத நாடுகள் வரிசையில் முன்னனியில் நிற்கிறது? ஏன் இந்தச் சொர்க்காபுரி இன்று நரகமாக மாறியது? பிரிட்டன் போன்ற குடியாதிக்க நாடுகளுக்கே கடன் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த நாடு, ஏன் இன்று உலக நாடுகள் போடும் பிச்சையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது?

இதற்கான விடைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, January 31, 2007

அவள் ---- [கவிதை]


'மான்' என அவளைச் சொன்னால்
   மருளுதல் அவளுக் கில்லை
'மீன்விழி உடையா' ளென்றால்
   மீனிலே கருமை இல்லை
'தேன்மொழிக் குவமை' சொன்னால்
   தெவிட்டுதல் தேனுக் குண்டு
'கூன்பிறை நெற்றி' என்றால்
   குறைமுகம் இருண்டு போகும்


'மயிலெனும் சாய' லென்றால்
   தோகைபெண் மயிலுக் கில்லை
'குயிலெனும் குரலாள்' என்றால்
   ஏழிசை குயிலுக் கில்லை
'வெயிலொளி மேனி' என்றால்
   வெயிலிலே வெப்பம் உண்டு
'அயிலெனும் பார்வை' என்றால்
   அழிவின்றி ஆக்க மில்லை


'சந்திர வதனம்' என்றால்
   சந்திரன் மறுநாள் தேய்வான்
'அந்தரப் பெண்போல்' என்றால்
   அவளை நாம் பார்த்த தில்லை
'செந்திரு மகள்போல்' என்றால்
   திருவினைக் கண்டார் யாரே?
'சுந்தர வடிவெ'ன் றாலும்
   சொல்லிலே வலிமை இல்லை


'கூந்தலை மேகம்' என்றால்
   மேகத்தில் கருமை கொஞ்சம்
'காந்தளைக் கைபோ' லென்றால்
   கேட்டதே கண்டதில்லை
'மோந்ததும் வாடிப் போகும்
   முல்லை தான் பல்லுக் கீடோ?'
'ஏந்திழை' என்றிட்டாலும்
   இயற்கையின் எழிலைப் போக்கும்


'விரல்களைப் பவளம்' என்றால்
   வீணையை மீட்ட லாமோ?
'குரல்வளை சங்கம்' என்றால்
   சங்கொலி குமுறிக் கூவும்
'கரமதைக் கமலம்' என்றால்
   மாலையில் கமலம் கூம்பும்
'ஒருமரம் மூங்கில் தோளுக்
   குவமை' யென் றுரைக்க லாமோ?


'குமிழ்என மூக்கைச்' சொன்னால்
   கூர்மையும் நேர்மை யில்லை
'அமிழ்தவள் பாடல்' என்றால்
   தேவரே அமுதம் உண்டார்
'தமிழ்' எனும் இனிமை என்றால்
   தனித்தமிழ் இப்போ தில்லை
'கமழ்மணம் தேகம்' என்றால்
   கன்னியின் தாயே காண்பாள்


பற்பல உவமை சொல்லிப்
   பண்டிதர் களுக்கும் கூடக்
கற்பனை புரிந் திடாத
   கட்டுரை பின்னிக் காட்டும்
சொற்பல அடுக்க வேண்டாம்;
   சுருக்கமாய்ச் சொல்லப் போனால்
அற்புத அழகு முற்றும்
   இயற்கையில் அமைந்த நங்கை.


கண்டவர் மறக்க மாட்டார்
   கேட்டவர் காணப் போவார்
அண்டையிற் பழகி னோர்கள்
   அவளைவிட் டகல மாட்டார்
பெண்டுகள் வந்து வந்து
   பேசுதற் காசை கொள்வார்
சண்டையும் சலிப்பும் எல்லாம்
   சாந்தமாம் அவளைச் சார்ந்தால்


தன்னிலும் அறிந்தார் முன்னே
   தான் தனி மடமை தாங்கும்
நன்னயம் இல்லாச் சொல்லைக்
   கேட்கவும் நாணம் கொள்வாள்
அண்னியர்க் கேனும் தீமை
   ஆற்றிட அச்சம் கொள்வாள்
மன்னவர் தவறி னாலும்
   மத்திடாப் பயிர்ப்பு மண்டும்

தொடரும்....

பி.கு :- இக் கவிதையை நான் எழுதவில்லை. படித்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் இங்கே உங்களோடு பகிர்கிறேன். என்னே தமிழ்!!!!. மிகவும் எளிமையான தமிழில் அழகாக வார்த்தைகளளக் கோர்த்து பின்னப்பட்ட கவிதை இது. இக் கவிதை ஒரு பிரபல கவிஞரால் எழுதப்பட்டது. தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையேல், கவிதையின் மறுபகுதியையும் வெளியிட்ட பின்னர் சொல்கிறேன்.

Saturday, January 27, 2007

சில ஈழத்துச் சொற்கள்

இது ஒரு சோதனைப் பதிவு. வழமை போல் இன்று காலை Blogger account க்குள் நுழைய முயன்ற போது பலன் கிடைக்கவில்லை.புதிய Blogger க்கு மாற்றினால் தான் உள்ளே விடுவேன் என Blogger அடம்பிடித்தது. அதனால் இப்போதைக்கு மாறுவதில்லை என்றிருந்த என் பிடிவாதத்தில் இருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கி புதிய Blogger க்கு மாத்தியாச்சு.

சரி, மாற்றின பின் என் பழைய தளத்தில் இருந்த பல பாகங்களைக்[Hit Counter, etc] காணவில்லை. ஒரு விடயத்தைத் தவிர எல்லாம் சரி செய்தாச்சு. புது Blogger க்கு மாற்றிய பின் புதுப் பதிவு போட்டால் ஏதாவது சிக்கல்கள் வருகிறதா எனச் சோதித்துப் பார்க்கத்தான் இப் பதிவு.

உடனே எழுதுவது என்றால் என்னத்தை எழுதுவது? ஈழத்தில் எனது ஊரில் நான் வளர்ந்த சுற்றாடலில் புழங்கும் சில சொற்களைப் பதிவிட்டால் என்னவெனத் தோன்றியது. அதனால்தான் இப்பதிவு.

  1. உரிசை = உருசி(ருசி) = taste

  2. எ.கா:-
    வன்னிப் பலாப்பழம் நல்ல உரிசை.
  3. நெடுகல் = அடிக்கடி = always

  4. இச் சொல் பல இடங்களில் பல பொருளில் புழங்கப்படும்.
    எ.கா :-
    1.என்னெண்டு நெடுகலும் அவரிட்டை உதவி கேக்கிறது
    2.வீதி நெடுகலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது
  5. பரிசுகேடு = அவமானம்

  6. எ.கா :-
    ச்சீ, பரிசுகேடு, அவனாலை வெளியிலை தலை காட்ட முடியமல் இருக்குது
  7. கருக்கல் = அதிகாலை

  8. எ.கா:-
    கருக்கலோடை எழும்பி திருக்குறளை பாடமாக்கு
  9. குறுக்கால போவான்/(ள்) = ???

  10. இச் சொல்லுக்கு ஒத்த சொற்கள் எனக்குத் தெரியாது. இச் சொல்லின் சரியான பொருளும் எனக்குத் தெரியாது. ஆனால் இச் சொல் புழங்கும் சந்தர்ப்பம் தெரியும். ஒருவர் பெரியோர்களின் சொல்வழி கேளாமலோ அல்லது சமூக விரோதச் செயல்கள் செய்தாலோ அவனையோ அல்லது அவளையோ பார்த்து குறுக்கால போவானே அல்லது குறுக்கால போவாளே என்று திட்டுவர்கள். அடியேனும் பல முறை இப் பெயரால் திட்டு வாங்கியிருக்கிறேன்.:))

Friday, January 26, 2007

சிங்கப்பூர் செய்தது சரியா?

சிங்கப்பூர் நேற்று இரு ஆபிரிக்க இளைஞர்களைத் தூக்கிலிட்டிருக்கிறது. போதைவஸ்து கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதோ BBC online இல் இருந்து எடுத்த செய்தியைக் கீழே பாருங்கள்.

Singapore has executed two African men for drug smuggling after rejecting appeals for clemency by Nigeria's president, the UN and rights groups. Iwuchukwu Amara Tochi, 21, of Nigeria, and 35-year-old Okeke Nelson Malachy, a stateless African, were hanged at dawn.

A small group of activists held an overnight vigil outside the prison.
Singapore has some of the strictest drugs laws in the world and a long history of ignoring pleas for clemency from foreign governments.

Tochi was arrested at the airport in Singapore in 2004, carrying almost a million dollars worth of heroin.
Malachy was convicted as the intended recipient of the drugs.

'Duty'

Both men were hanged at around 0600 (2200GMT Thursday) at Changi Prison, officials said.

About 10 activists held an overnight vigil outside the prison compound, hanging a football shirt on the wall as a mark of Tochi's love of the game.

He maintained he had gone to Singapore to take part in a football tournament.

On the eve of their execution, the Singapore government released a letter Prime Minister Lee Hsien Loong had sent to Nigeria's President Olusegun Obasanjo.

"Mr Tochi's family will find Singapore's position difficult to accept, but we have a duty to safeguard the interests of Singaporeans, and protect the many lives that would otherwise be ruined by the drug syndicates," he wrote.

Mr Obasanjo, along with the UN and human rights groups, had appealed for restraint.

Singapore is believed to have one of the world's highest rates of execution per capita, the BBC's Andrew Harding reports from the tiny city state.

Just over a year ago, the Australian government angrily condemned the hanging of one of its citizens convicted on drug trafficking charges.

புலம்பெயர் கவிதை -- 1

கிட்டடியில்[அண்மையில்] நான் ஈழத்திற்குச் சென்றிருந்த போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்து பல விடயங்கள் பற்றிக் கதைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அங்கே நான் சந்தித்த பேராசிரியர்களில் ஒருவரான கலாநிதி. கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர்கள், தான் எழுதிய கவிதை விமர்சனப் புத்தகம் ஒன்றை எனக்கு அன்பளிப்புச் செய்து, அப் புத்தகத்தைப் படித்து என்னுடைய கருத்துக்களைத் தனக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டிருந்தார்கள்.

நானா? புத்தக விமர்சனமா? அதுவும் பேராசிரியர் ஒருவர் எழுதிய நூலுக்கா? பெரியவர்கள் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பழக்கம் இல்லாததால் [இல்லை என்ற சொல்லை எனது நண்பர்களிடமே சொல்லத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டுப்படுவது வேறு விடயம்] ஓம் என்று தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன்.

அன்பர்களே, அவரின் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை இங்கே பதிகிறேன்.
மிக்க நன்றி.


பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் பற்றிச் சிறுகுறிப்பு:
இவர் ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுங்தீவு எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை மேற்கொண்டவர்.தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.


நூல் பற்றிய சில குறிப்புகள்:

தலைப்பு     : புலம்பெயர் கவிதை
            உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை
Title         : Expatriate Poetry
                Form, Content and Expression
ஆசிரியர்     :கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
Author        : Dr. Krishnapillai Visakaruban
பதிப்பு      : முதற்பதிப்பு, பங்குனி 2004
Edition       : First Edition, March 2004
வெளியீடு    : யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி
            கோப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை.
Published by  : Jaffna National College of Education
                Kopay, Jaffna, Ceylon


சரி, இனி கலாநிதி விசாகரூபன் அவர்களின் நூலில் இருந்து.

...புலம் பெயர்ந்தோர்களது இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் கணிசமான இடத்தை நிறைத்து நிற்பனவாக "கவிதைகள்" காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் புலம் பெயர்ந்தோர் கவிதைகளையே குறித்து நிற்கும் அளவுக்கு கவிதைகளின் மேலாதிக்கத்தினைப் பார்க்க முடிகிறது. இக்கவிதைகள் புதிய வடிவத்தை, புதிய மரபைத் தோற்றுவித்தமை காரணமாக விசேட கவனம் பெறுபவை. புதிய மனிதர், புதிய மொழி, புதிய நிறம், புதிய அனுபவங்கள், சமயம், உடை, பழக்கவழக்கங்கள் முதலானவை உள்ளிட்ட புதிய பண்பாட்டுடனான ஊடாட்டத்தினால் தமிழ்க்கவிதை புதிய குறியீடுகளையும், புதிய படிமங்களையும், புதியபாடு பொருள்களையும் பெற்று மேல் நோக்கிய அசைவியக்கத்தினைப் பெற்று வருவதனைப் பார்க்கமுடிகிறது. தமிழ்க் கவிதைப் பாடுபொருளின் அகற்சித்தன்மை குறிப்பிட்டுப் பேசக்கூடிய ஒன்றாக அமைந்து வருகிறது. இக் கவிதைகள் மேற்கிளப்பியுள்ள உரிப் பொருள் தமிழ்மரபு அதுவரை கண்டிராத எல்லைகளைத் தொட்டு நிற்கிறது. மரபுவழி இலக்கியங்களுக்கூடாக ஐவகை நிலம் பற்றியே கண்டும் கேட்டும் வந்த தமிழருக்கு ஆறாம் திணையாகப் பனிபடர்ந்த பாலையும் "அப்பாலையில் வாழமுயற்சிக்கும்" புலம் பெயர்ந்தோர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் இக் கவிதைகள் காட்டி நிற்கின்றன... [பக் . 1-2]

...தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து முற்றிலும் புதியதான ஒரு சூழலில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்துவதிலும் அவற்றைக் கலாபூர்வமாகப் பிறருடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர்கள் காட்டிய ஆர்வம் அல்லது முனைப்பு கனதியான பல்வேறு கவிதைகளை வெளிக்கொணர்ந்தது. இக் கவிதைகள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் பிறிதொரு தளத்தில், தடத்தில் கொண்டு செல்வனவாக அமைந்திருந்தன எனக் குறிப்பிடலாம்... [பக். 9]

...புலம்பெயர் கவிதைகளின் உள்ளடக்கத்தினை நோக்குகின்றபோது அவை பலதரப்பட்டனவாக அமைகின்ற தன்மையினை நோக்க முடிகிறது. இப் பாடுபொருட் பட்டியலானது காலத்திற்குக் காலம் அகற்சி பெற்றுச் செல்வதனையும் அவதானிக்க முடிகிறது.எனினும் இக் கவிதைகள் முனைப்புறுத்தி நிற்கும் பாடுபொருட்களை தாயகம், புகலிட வாழ்வுக் கெடுபிடிகள், பெண்நிலைவாதம், மேலைப்புலத்தின் முன்னேற்றம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை, பண்பாட்டுப் புரிதலின்மை, வேலையில்லாப் பிரச்சினை, சாதி, கலப்புத்திருமணம், கோஷ்டி மோதல்கள், சர்வதேச விவகாரங்கள் எனப் பொதுவாகப் பிரித்து நோக்கமுடிகிறது... [பக். 13]

பிரயாண நிலை அவலம்

புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து செல்வது மிகவும் எளிதான சுலபமான ஒரு காரியமாக இருக்கவில்லை. பிரயாண நிலையில் மாதங்களை, வருடங்களைத் தொலைத்தவர்கள் கணிசமானோர். பிரயாணக் காலத்தில் பிறருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டித்தே காணப்பட்டிருந்தன. புலம் பெயர்ந்து செல்கையில் முறையான "பாஸ்போர்ட்"(Passport), "விசா" (Visa) என்பன இல்லாததனால் அஞ்சிப் பயந்து மிகவும் கடினமான வழிகளில் கூட பிரயாணம் செய்ய நேரிடுகிறது.

உடல் விறைக்கும் கடல்வழியேயும், மூச்சுமுட்டும் "பெற்றோல் பவுசர்" களிலும் பாரஊர்திகளிலும், பல்வேறு வகைக் கொள்கலன்களிலும் இன்னும் பல்வேறு அவலவழிகளிலும் இப்பிரயாணம் தொடரும்.இப்பிரயாண முயற்சியில் தம் வாழ்வை முடித்துக் கொண்டு முகமழிந்து போனவர்கள் பலர்(1).

"வரும் வழியில்" என்ற தலைப்பிலான கி.பி. அரவிந்தனின் கவிதை வரிகள் வழி அனுப்பி வைத்த நண்பனின் துயர முடிவு குறித்துப் பின்வருமாறு சித்தரிக்கின்றன.

உள்ளங் கைக்குள் உலகம்
எல்லாமும் கணப்பொழுதில்
எத்தகைய பொய் இது.
"எப்போதும் சந்திக்கலாம்
என்றிருந்த நண்பர்கள்
நினைவுச் சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிப் போயினர்
சந்திக்காமலேயே!

எனக்கும் அவர்க்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
கிரேக்கக் கடலில் மூழ்கியும்
ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பாரவண்டியின் மூச்சுமுட்டியும்
பாதி வழியில் கழிந்தது
அவர்களின் மீதி
....
கிரேக்கக் கடல் மடியில்
குளிரில் நீ விறைக்கையில்
என்னை நீ நினைத்தாயோ
உன்பெயரை நான்
பத்திரிகையில் கண்ணுற்றேன்
கொப்பளித்துப் பொருமியது
வெடிக்காமல் போயிற்று நெஞ்சு"

மேற்படி கவிதை வரிகள் பிரயாண நிலை அவலச் சித்தரிப்பின் 'பதச்சோறாக' அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். [பக்.14-16]


1. செக்கோஸ்லாவாக்கியாவில் 21.10.1998 அன்று மின்சார இரயில் பாதையைக் கடக்க முயன்று எதிரே வந்த இரயிலினால் மோதுண்டு சுமார் 30 பேர்வரை இறந்து போனார்கள். இத்தாலியின் மால்டா தீவில் 24.12.1996 அன்று அளவுக்கதிகமான புலப்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 290 தமிழர்கள் இறந்து போனார்கள். இவ் விபத்துக்கள் வகைமாதிரியான எடுத்துக்காட்டுகளாகும்.

Sunday, January 07, 2007

கவியரசரின் தீர்க்கதரிசனமான கவிதை

MGR - வே.பிரபாகரன் MGR & Pirapa

வே.பிரபாகரன் பிரபாகரன்

தந்தை செல்வா தந்தை செல்வா

கவியரசர் கவியரசர்


அமைதியான வழிகளில் எவ்வளவோ போராடிப் பார்த்தும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாது தவிப்பது கண்டு கவிஞர் மனம் குமைந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத் தமிழர்கள் நடத்தி வந்த அறப்போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு அளித்துப் பேசினார், எழுதினார்.ஆயுதப் போராட்டம் பற்றி ஈழத் தமிழர்கள் நடுவில் சிந்தனையே இல்லாத வேளையில் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தூக்குவது தவிர வேறு வழியில்லை என்று கவிஞர் கருதினார். எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்

என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!

குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!
மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!
தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!

தமிழீழத்தில் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னேயே ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆயுதம் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்த கவிஞர் அதைத் தெளிவாக எழுதியது அவரது மன ஓட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

'வீரமைந்தர் வேலொடும் தோன்றுக வேங்கையென்று பெயர்பெற வாழுக'
எனப் பாடினார் கவிஞர். அவர் பாடியபடியே வேங்கைகள் தோன்றினார்கள். அவர்களின் போராட்டம் பற்றியும் கவியரசர் கனவு கண்டார்.

ஏ ஓய் தமிழா! ஏ ஓய் தமிழா!
எழில், கலை, காதல் ஒதுக்கி மூடிவை!
நாடெனும் வானொடு முட்டுக போரை!
அழிவதில் இப்பணிக கழிவதே பெருமை!
வீடணக் குழாத்தை வேரோடு சாய்ப்பாய்!
குருதியில் குளிப்பாய்! கொற்றவர் ஆண்ட
திருவினை நாட்டை மீட்பதில் அழிவாய்!

அவர் கனவு அப்படியே பலித்தது.குருதியில் குளித்தவண்ணம் புலிகள் தங்கள் திருநாட்டைமீட்கப் போராடி வருகிறார்கள். எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் தலைமையில் தமிழீழ இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இருபது ஆண்டுகளில் அந்தப் போராட்டம் வளர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 20 ஆண்டுக் காலத்தில் இந்தப் போராட்டம் எத்தகைய மகத்தான வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்பதைக் கவிஞர் இன்று இருந்து பார்த்திருந்தால் எவ்வளவு மனம் பூரித்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகிறது. தம்பி பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திவரும் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு வீரகாவியமே இயற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

[பழ.நெடுமாறன், "கவியரசர் என் காவலர்", தமிழ் முழக்கம் பதிப்பகம், சென்னை, 2001, பக். 65-68]

Saturday, December 30, 2006

ஒரு பரத நாட்டிய ஒளிப்படம்[video-clip]

அண்மையில் நான் பார்த்து இரசித்த பரத நாட்டியக் காட்சி இது. இந் நிகழ்ச்சி லண்டன் TTN [Thamil Television Network] தொலைக்காட்சி நிலையத்தினரது தயாரிப்பு. இதே பாடலுக்கு இங்கே கனடாவிலும் கடந்த மாதம் சில பெண்கள் பரத நாட்டியம் ஆடியதை நேரில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் அதிகமான பரத நாட்டியங்கள் தமிழ்ப்பாடல்களுக்கே ஆடப்படும். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இன்னுமொரு விடயம், எமது பெம்பிளைப் பிள்ளைகளை[பெண்கள்] நெடுகலும் [தொடர்ந்து] மேற்கத்தைய ஆடைகளிலேயே பார்ப்பதாலோ என்னவோ, அவர்களை இப்படிச் சேலை மற்றும் ஆபரணங்களுடன் பார்க்கும் போது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். இக் கோலத்தில் அவர்களைப் பார்ப்பதற்காகவே கோவில்களுக்கும் இப்படியான நிகழ்வுகளுக்கும் போய்வருவதை மறுக்கவா முடியும்? :))

சரி, நீங்களும் இந்த அருமையான நடனத்தைக் கண்டு மகிழ இங்கே கிளிக் செய்யவும்.[Load ஆக கொஞ்ச நேரம்(சில வினாடிகள்) எடுக்கும். தயவு செய்து பொறுமை காத்துக் கொள்ளவும்]

Wednesday, December 13, 2006

Anonymous எனும் பதிவருக்கு என் பதில்

Anonymous எனும் பெயரில் எழுதும் அன்பர் ஒருவர் "புலிகளைக் கண்டு பார்ப்பனர் நடுக்கம்" எனும் தலைப்பில் ஒரு பதிவு போட்டுள்ளார்கள். ஈழத் தமிழர்கள் மீதான அவரின் கரிசனைக்கு ஒரு ஈழத்தமிழன் எனும் வகையில் அவருக்கு நன்றி சொல்லுகிறேன். அதேநேரம், அவரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் கருத்தை அவ்ரின் பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.தேவை கருதி அதை இங்கேயும் தனிப்பதிவாகத் தருகிறேன்.


ஐயா,
தேவையற்ற பதிவு. தமிழகப் பிரச்சனைகளோடு ஈழப் பிரச்சனையை தயவு செய்து முடிச்சுப் போடாதீர்கள் என ஈழத்தமிழன் என்ற வகையில் கேட்டுக் கொள்கிறேன்.

ஐயா, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி, தமிழீழ மக்களும் சரி தமது எதிரி யார் நண்பர் யார் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எனவே தயவு செய்து தேவையில்லாமல், எழுத வேண்டும் என்பதற்காக எதையோ எழுதி , தமிழக மக்களைக் குழப்பி எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஈழத்தில் இப்படியான பார்ப்பனன், ஆரியன் , திராவிடன் எனும் அரசியல் குழப்பங்கள் இல்லை என்பதையும் இங்கே உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.
மிக்க நன்றி.

Sunday, October 08, 2006

உலகின் அதி சிறந்த பல்கலைக்கழகங்கள் [Top Universities]

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதி சிறந்தவை[top] எவையென வருடாந்தம் நடாத்தப்படும் rankings[இச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் என்ன] சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.

நான் படித்த பல்கலைக்கழகம் 27 வது இடத்திலிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி.

உலக பல்கலைக்கழக rankings [World University Rankings] பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tuesday, October 03, 2006

புனித பாப்பரசரும் சீக்கிய மக்களும்

அன்பர்களே, பாப்பரசரையோ, கிறிஸ்தவ மதத்தவர்களையோ அல்லது சீக்கிய மக்களையோ எள்ளி நகையாடுவதற்காகப் போடப்படும் பதிவல்ல இது. இப்பதிவின் மூலம் யாருக்காவது மனம் புண்படுமாயின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். உடனடியாக இப்பதிவை நீக்கிவிடுகிறேன்.

மும்பாயில் வசிக்கும் என் நண்பன் இன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பகிடிக்[நகைச்சுவை/தமாஷ்] கதை இது. இக் கதையை பலர் ஏற்கனவே படித்திருக்கலாம். மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்திலேயே வெட்டி ஒட்டுகிறேன்.


About a century or two ago, the Pope decided that all the Sikhs had to leave Italy. Naturally there was a big uproar from the Sikh community.

So the Pope made a deal. He would have a religious debate with a member of the Sikh community. If the Sikh won, the Sikhs could stay.

If the Pope won, the Sikhs would leave.

The Sikhs realized that they had no choice. So they picked a middle-aged man named Harbinder Singh to represent them. Harbinder asked for one additional condition to the debate. To make it more interesting, neither side would be allowed to talk.

The Pope agreed.

The day of the great debate came. Harbinder Singh and the Pope sat opposite each other for a full minute. Then the Pope raised his hand and showed three fingers.

Harbinder looked back at him and raised one finger.

The Pope waved his fingers in a circle around his head.

Harbinder pointed to the ground where he sat.

The Pope pulled out a wafer and a glass of wine.

Harbinder pulled out an apple.

The Pope stood up and said, "I give up. This man is too good. The Sikhs can stay."

An hour later, the cardinals were gathered around the Pope asking him what had happened.

The Pope said, "First I held up three fingers to represent the holy trinity.

He responded by holding up one finger to remind me that there was still One God common to both our religions.

Then, I waved my finger around me to show him that God was all around us.

He responded by pointing to the ground and showing that God was also right here with us.

Then, I pulled out the wine and wafer to show that God absolves us from our sins.

He pulled out an apple to remind me of original sin. He had an answer for everything. What could I do?"

Meanwhile, the Sikh community had crowded around Harbinder Singh. "What happened?" they asked.

"Well," said Harbinder, "First he said to me that the Sikhs had three days to get out of here.

I told him not one of us was leaving.

Then he told me that this whole city would be cleared of Sikhs.

I let him know that we were staying right here."

"Yes, and then???" asked the crowd.

"I don't know", said Harbinder, "He took out his lunch, and I took out mine!!

Friday, September 29, 2006

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- [கவிதை]

அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது
?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

பிற்குறிப்பு:
[1]இக் கவிதையைப் புனைந்தவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். "ஒரு ஈழப் போராளிக்குக் காதலியின் கடிதம்" எனும் பொருளில் எழுதப்பட்டது.
[2]மேலே இணைக்கப்பட்ட படம் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு சிங்கள அரசின் எதுவித உதவியுமில்லாமல் அகதிமுகாம்களில் வாழும் தமிழ்பிஞ்சுகள். இப் படம் இணையத்தில் இருந்து சுடப்பட்ட படம். நான் எடுத்த படமல்ல.