Wednesday, January 31, 2007

அவள் ---- [கவிதை]


'மான்' என அவளைச் சொன்னால்
   மருளுதல் அவளுக் கில்லை
'மீன்விழி உடையா' ளென்றால்
   மீனிலே கருமை இல்லை
'தேன்மொழிக் குவமை' சொன்னால்
   தெவிட்டுதல் தேனுக் குண்டு
'கூன்பிறை நெற்றி' என்றால்
   குறைமுகம் இருண்டு போகும்


'மயிலெனும் சாய' லென்றால்
   தோகைபெண் மயிலுக் கில்லை
'குயிலெனும் குரலாள்' என்றால்
   ஏழிசை குயிலுக் கில்லை
'வெயிலொளி மேனி' என்றால்
   வெயிலிலே வெப்பம் உண்டு
'அயிலெனும் பார்வை' என்றால்
   அழிவின்றி ஆக்க மில்லை


'சந்திர வதனம்' என்றால்
   சந்திரன் மறுநாள் தேய்வான்
'அந்தரப் பெண்போல்' என்றால்
   அவளை நாம் பார்த்த தில்லை
'செந்திரு மகள்போல்' என்றால்
   திருவினைக் கண்டார் யாரே?
'சுந்தர வடிவெ'ன் றாலும்
   சொல்லிலே வலிமை இல்லை


'கூந்தலை மேகம்' என்றால்
   மேகத்தில் கருமை கொஞ்சம்
'காந்தளைக் கைபோ' லென்றால்
   கேட்டதே கண்டதில்லை
'மோந்ததும் வாடிப் போகும்
   முல்லை தான் பல்லுக் கீடோ?'
'ஏந்திழை' என்றிட்டாலும்
   இயற்கையின் எழிலைப் போக்கும்


'விரல்களைப் பவளம்' என்றால்
   வீணையை மீட்ட லாமோ?
'குரல்வளை சங்கம்' என்றால்
   சங்கொலி குமுறிக் கூவும்
'கரமதைக் கமலம்' என்றால்
   மாலையில் கமலம் கூம்பும்
'ஒருமரம் மூங்கில் தோளுக்
   குவமை' யென் றுரைக்க லாமோ?


'குமிழ்என மூக்கைச்' சொன்னால்
   கூர்மையும் நேர்மை யில்லை
'அமிழ்தவள் பாடல்' என்றால்
   தேவரே அமுதம் உண்டார்
'தமிழ்' எனும் இனிமை என்றால்
   தனித்தமிழ் இப்போ தில்லை
'கமழ்மணம் தேகம்' என்றால்
   கன்னியின் தாயே காண்பாள்


பற்பல உவமை சொல்லிப்
   பண்டிதர் களுக்கும் கூடக்
கற்பனை புரிந் திடாத
   கட்டுரை பின்னிக் காட்டும்
சொற்பல அடுக்க வேண்டாம்;
   சுருக்கமாய்ச் சொல்லப் போனால்
அற்புத அழகு முற்றும்
   இயற்கையில் அமைந்த நங்கை.


கண்டவர் மறக்க மாட்டார்
   கேட்டவர் காணப் போவார்
அண்டையிற் பழகி னோர்கள்
   அவளைவிட் டகல மாட்டார்
பெண்டுகள் வந்து வந்து
   பேசுதற் காசை கொள்வார்
சண்டையும் சலிப்பும் எல்லாம்
   சாந்தமாம் அவளைச் சார்ந்தால்


தன்னிலும் அறிந்தார் முன்னே
   தான் தனி மடமை தாங்கும்
நன்னயம் இல்லாச் சொல்லைக்
   கேட்கவும் நாணம் கொள்வாள்
அண்னியர்க் கேனும் தீமை
   ஆற்றிட அச்சம் கொள்வாள்
மன்னவர் தவறி னாலும்
   மத்திடாப் பயிர்ப்பு மண்டும்

தொடரும்....

பி.கு :- இக் கவிதையை நான் எழுதவில்லை. படித்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் இங்கே உங்களோடு பகிர்கிறேன். என்னே தமிழ்!!!!. மிகவும் எளிமையான தமிழில் அழகாக வார்த்தைகளளக் கோர்த்து பின்னப்பட்ட கவிதை இது. இக் கவிதை ஒரு பிரபல கவிஞரால் எழுதப்பட்டது. தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையேல், கவிதையின் மறுபகுதியையும் வெளியிட்ட பின்னர் சொல்கிறேன்.

Saturday, January 27, 2007

சில ஈழத்துச் சொற்கள்

இது ஒரு சோதனைப் பதிவு. வழமை போல் இன்று காலை Blogger account க்குள் நுழைய முயன்ற போது பலன் கிடைக்கவில்லை.புதிய Blogger க்கு மாற்றினால் தான் உள்ளே விடுவேன் என Blogger அடம்பிடித்தது. அதனால் இப்போதைக்கு மாறுவதில்லை என்றிருந்த என் பிடிவாதத்தில் இருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கி புதிய Blogger க்கு மாத்தியாச்சு.

சரி, மாற்றின பின் என் பழைய தளத்தில் இருந்த பல பாகங்களைக்[Hit Counter, etc] காணவில்லை. ஒரு விடயத்தைத் தவிர எல்லாம் சரி செய்தாச்சு. புது Blogger க்கு மாற்றிய பின் புதுப் பதிவு போட்டால் ஏதாவது சிக்கல்கள் வருகிறதா எனச் சோதித்துப் பார்க்கத்தான் இப் பதிவு.

உடனே எழுதுவது என்றால் என்னத்தை எழுதுவது? ஈழத்தில் எனது ஊரில் நான் வளர்ந்த சுற்றாடலில் புழங்கும் சில சொற்களைப் பதிவிட்டால் என்னவெனத் தோன்றியது. அதனால்தான் இப்பதிவு.

  1. உரிசை = உருசி(ருசி) = taste

  2. எ.கா:-
    வன்னிப் பலாப்பழம் நல்ல உரிசை.
  3. நெடுகல் = அடிக்கடி = always

  4. இச் சொல் பல இடங்களில் பல பொருளில் புழங்கப்படும்.
    எ.கா :-
    1.என்னெண்டு நெடுகலும் அவரிட்டை உதவி கேக்கிறது
    2.வீதி நெடுகலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது
  5. பரிசுகேடு = அவமானம்

  6. எ.கா :-
    ச்சீ, பரிசுகேடு, அவனாலை வெளியிலை தலை காட்ட முடியமல் இருக்குது
  7. கருக்கல் = அதிகாலை

  8. எ.கா:-
    கருக்கலோடை எழும்பி திருக்குறளை பாடமாக்கு
  9. குறுக்கால போவான்/(ள்) = ???

  10. இச் சொல்லுக்கு ஒத்த சொற்கள் எனக்குத் தெரியாது. இச் சொல்லின் சரியான பொருளும் எனக்குத் தெரியாது. ஆனால் இச் சொல் புழங்கும் சந்தர்ப்பம் தெரியும். ஒருவர் பெரியோர்களின் சொல்வழி கேளாமலோ அல்லது சமூக விரோதச் செயல்கள் செய்தாலோ அவனையோ அல்லது அவளையோ பார்த்து குறுக்கால போவானே அல்லது குறுக்கால போவாளே என்று திட்டுவர்கள். அடியேனும் பல முறை இப் பெயரால் திட்டு வாங்கியிருக்கிறேன்.:))

Friday, January 26, 2007

சிங்கப்பூர் செய்தது சரியா?

சிங்கப்பூர் நேற்று இரு ஆபிரிக்க இளைஞர்களைத் தூக்கிலிட்டிருக்கிறது. போதைவஸ்து கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதோ BBC online இல் இருந்து எடுத்த செய்தியைக் கீழே பாருங்கள்.

Singapore has executed two African men for drug smuggling after rejecting appeals for clemency by Nigeria's president, the UN and rights groups. Iwuchukwu Amara Tochi, 21, of Nigeria, and 35-year-old Okeke Nelson Malachy, a stateless African, were hanged at dawn.

A small group of activists held an overnight vigil outside the prison.
Singapore has some of the strictest drugs laws in the world and a long history of ignoring pleas for clemency from foreign governments.

Tochi was arrested at the airport in Singapore in 2004, carrying almost a million dollars worth of heroin.
Malachy was convicted as the intended recipient of the drugs.

'Duty'

Both men were hanged at around 0600 (2200GMT Thursday) at Changi Prison, officials said.

About 10 activists held an overnight vigil outside the prison compound, hanging a football shirt on the wall as a mark of Tochi's love of the game.

He maintained he had gone to Singapore to take part in a football tournament.

On the eve of their execution, the Singapore government released a letter Prime Minister Lee Hsien Loong had sent to Nigeria's President Olusegun Obasanjo.

"Mr Tochi's family will find Singapore's position difficult to accept, but we have a duty to safeguard the interests of Singaporeans, and protect the many lives that would otherwise be ruined by the drug syndicates," he wrote.

Mr Obasanjo, along with the UN and human rights groups, had appealed for restraint.

Singapore is believed to have one of the world's highest rates of execution per capita, the BBC's Andrew Harding reports from the tiny city state.

Just over a year ago, the Australian government angrily condemned the hanging of one of its citizens convicted on drug trafficking charges.

புலம்பெயர் கவிதை -- 1

கிட்டடியில்[அண்மையில்] நான் ஈழத்திற்குச் சென்றிருந்த போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்து பல விடயங்கள் பற்றிக் கதைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அங்கே நான் சந்தித்த பேராசிரியர்களில் ஒருவரான கலாநிதி. கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர்கள், தான் எழுதிய கவிதை விமர்சனப் புத்தகம் ஒன்றை எனக்கு அன்பளிப்புச் செய்து, அப் புத்தகத்தைப் படித்து என்னுடைய கருத்துக்களைத் தனக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டிருந்தார்கள்.

நானா? புத்தக விமர்சனமா? அதுவும் பேராசிரியர் ஒருவர் எழுதிய நூலுக்கா? பெரியவர்கள் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பழக்கம் இல்லாததால் [இல்லை என்ற சொல்லை எனது நண்பர்களிடமே சொல்லத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டுப்படுவது வேறு விடயம்] ஓம் என்று தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன்.

அன்பர்களே, அவரின் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை இங்கே பதிகிறேன்.
மிக்க நன்றி.


பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் பற்றிச் சிறுகுறிப்பு:
இவர் ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுங்தீவு எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை மேற்கொண்டவர்.தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.


நூல் பற்றிய சில குறிப்புகள்:

தலைப்பு     : புலம்பெயர் கவிதை
            உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை
Title         : Expatriate Poetry
                Form, Content and Expression
ஆசிரியர்     :கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
Author        : Dr. Krishnapillai Visakaruban
பதிப்பு      : முதற்பதிப்பு, பங்குனி 2004
Edition       : First Edition, March 2004
வெளியீடு    : யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி
            கோப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை.
Published by  : Jaffna National College of Education
                Kopay, Jaffna, Ceylon


சரி, இனி கலாநிதி விசாகரூபன் அவர்களின் நூலில் இருந்து.

...புலம் பெயர்ந்தோர்களது இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் கணிசமான இடத்தை நிறைத்து நிற்பனவாக "கவிதைகள்" காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் புலம் பெயர்ந்தோர் கவிதைகளையே குறித்து நிற்கும் அளவுக்கு கவிதைகளின் மேலாதிக்கத்தினைப் பார்க்க முடிகிறது. இக்கவிதைகள் புதிய வடிவத்தை, புதிய மரபைத் தோற்றுவித்தமை காரணமாக விசேட கவனம் பெறுபவை. புதிய மனிதர், புதிய மொழி, புதிய நிறம், புதிய அனுபவங்கள், சமயம், உடை, பழக்கவழக்கங்கள் முதலானவை உள்ளிட்ட புதிய பண்பாட்டுடனான ஊடாட்டத்தினால் தமிழ்க்கவிதை புதிய குறியீடுகளையும், புதிய படிமங்களையும், புதியபாடு பொருள்களையும் பெற்று மேல் நோக்கிய அசைவியக்கத்தினைப் பெற்று வருவதனைப் பார்க்கமுடிகிறது. தமிழ்க் கவிதைப் பாடுபொருளின் அகற்சித்தன்மை குறிப்பிட்டுப் பேசக்கூடிய ஒன்றாக அமைந்து வருகிறது. இக் கவிதைகள் மேற்கிளப்பியுள்ள உரிப் பொருள் தமிழ்மரபு அதுவரை கண்டிராத எல்லைகளைத் தொட்டு நிற்கிறது. மரபுவழி இலக்கியங்களுக்கூடாக ஐவகை நிலம் பற்றியே கண்டும் கேட்டும் வந்த தமிழருக்கு ஆறாம் திணையாகப் பனிபடர்ந்த பாலையும் "அப்பாலையில் வாழமுயற்சிக்கும்" புலம் பெயர்ந்தோர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் இக் கவிதைகள் காட்டி நிற்கின்றன... [பக் . 1-2]

...தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து முற்றிலும் புதியதான ஒரு சூழலில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்துவதிலும் அவற்றைக் கலாபூர்வமாகப் பிறருடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர்கள் காட்டிய ஆர்வம் அல்லது முனைப்பு கனதியான பல்வேறு கவிதைகளை வெளிக்கொணர்ந்தது. இக் கவிதைகள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் பிறிதொரு தளத்தில், தடத்தில் கொண்டு செல்வனவாக அமைந்திருந்தன எனக் குறிப்பிடலாம்... [பக். 9]

...புலம்பெயர் கவிதைகளின் உள்ளடக்கத்தினை நோக்குகின்றபோது அவை பலதரப்பட்டனவாக அமைகின்ற தன்மையினை நோக்க முடிகிறது. இப் பாடுபொருட் பட்டியலானது காலத்திற்குக் காலம் அகற்சி பெற்றுச் செல்வதனையும் அவதானிக்க முடிகிறது.எனினும் இக் கவிதைகள் முனைப்புறுத்தி நிற்கும் பாடுபொருட்களை தாயகம், புகலிட வாழ்வுக் கெடுபிடிகள், பெண்நிலைவாதம், மேலைப்புலத்தின் முன்னேற்றம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை, பண்பாட்டுப் புரிதலின்மை, வேலையில்லாப் பிரச்சினை, சாதி, கலப்புத்திருமணம், கோஷ்டி மோதல்கள், சர்வதேச விவகாரங்கள் எனப் பொதுவாகப் பிரித்து நோக்கமுடிகிறது... [பக். 13]

பிரயாண நிலை அவலம்

புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து செல்வது மிகவும் எளிதான சுலபமான ஒரு காரியமாக இருக்கவில்லை. பிரயாண நிலையில் மாதங்களை, வருடங்களைத் தொலைத்தவர்கள் கணிசமானோர். பிரயாணக் காலத்தில் பிறருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டித்தே காணப்பட்டிருந்தன. புலம் பெயர்ந்து செல்கையில் முறையான "பாஸ்போர்ட்"(Passport), "விசா" (Visa) என்பன இல்லாததனால் அஞ்சிப் பயந்து மிகவும் கடினமான வழிகளில் கூட பிரயாணம் செய்ய நேரிடுகிறது.

உடல் விறைக்கும் கடல்வழியேயும், மூச்சுமுட்டும் "பெற்றோல் பவுசர்" களிலும் பாரஊர்திகளிலும், பல்வேறு வகைக் கொள்கலன்களிலும் இன்னும் பல்வேறு அவலவழிகளிலும் இப்பிரயாணம் தொடரும்.இப்பிரயாண முயற்சியில் தம் வாழ்வை முடித்துக் கொண்டு முகமழிந்து போனவர்கள் பலர்(1).

"வரும் வழியில்" என்ற தலைப்பிலான கி.பி. அரவிந்தனின் கவிதை வரிகள் வழி அனுப்பி வைத்த நண்பனின் துயர முடிவு குறித்துப் பின்வருமாறு சித்தரிக்கின்றன.

உள்ளங் கைக்குள் உலகம்
எல்லாமும் கணப்பொழுதில்
எத்தகைய பொய் இது.
"எப்போதும் சந்திக்கலாம்
என்றிருந்த நண்பர்கள்
நினைவுச் சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிப் போயினர்
சந்திக்காமலேயே!

எனக்கும் அவர்க்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
கிரேக்கக் கடலில் மூழ்கியும்
ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பாரவண்டியின் மூச்சுமுட்டியும்
பாதி வழியில் கழிந்தது
அவர்களின் மீதி
....
கிரேக்கக் கடல் மடியில்
குளிரில் நீ விறைக்கையில்
என்னை நீ நினைத்தாயோ
உன்பெயரை நான்
பத்திரிகையில் கண்ணுற்றேன்
கொப்பளித்துப் பொருமியது
வெடிக்காமல் போயிற்று நெஞ்சு"

மேற்படி கவிதை வரிகள் பிரயாண நிலை அவலச் சித்தரிப்பின் 'பதச்சோறாக' அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். [பக்.14-16]


1. செக்கோஸ்லாவாக்கியாவில் 21.10.1998 அன்று மின்சார இரயில் பாதையைக் கடக்க முயன்று எதிரே வந்த இரயிலினால் மோதுண்டு சுமார் 30 பேர்வரை இறந்து போனார்கள். இத்தாலியின் மால்டா தீவில் 24.12.1996 அன்று அளவுக்கதிகமான புலப்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 290 தமிழர்கள் இறந்து போனார்கள். இவ் விபத்துக்கள் வகைமாதிரியான எடுத்துக்காட்டுகளாகும்.

Sunday, January 07, 2007

கவியரசரின் தீர்க்கதரிசனமான கவிதை

MGR - வே.பிரபாகரன் MGR & Pirapa

வே.பிரபாகரன் பிரபாகரன்

தந்தை செல்வா தந்தை செல்வா

கவியரசர் கவியரசர்


அமைதியான வழிகளில் எவ்வளவோ போராடிப் பார்த்தும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாது தவிப்பது கண்டு கவிஞர் மனம் குமைந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத் தமிழர்கள் நடத்தி வந்த அறப்போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு அளித்துப் பேசினார், எழுதினார்.ஆயுதப் போராட்டம் பற்றி ஈழத் தமிழர்கள் நடுவில் சிந்தனையே இல்லாத வேளையில் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தூக்குவது தவிர வேறு வழியில்லை என்று கவிஞர் கருதினார். எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்

என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!

குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!
மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!
தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!

தமிழீழத்தில் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னேயே ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆயுதம் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்த கவிஞர் அதைத் தெளிவாக எழுதியது அவரது மன ஓட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

'வீரமைந்தர் வேலொடும் தோன்றுக வேங்கையென்று பெயர்பெற வாழுக'
எனப் பாடினார் கவிஞர். அவர் பாடியபடியே வேங்கைகள் தோன்றினார்கள். அவர்களின் போராட்டம் பற்றியும் கவியரசர் கனவு கண்டார்.

ஏ ஓய் தமிழா! ஏ ஓய் தமிழா!
எழில், கலை, காதல் ஒதுக்கி மூடிவை!
நாடெனும் வானொடு முட்டுக போரை!
அழிவதில் இப்பணிக கழிவதே பெருமை!
வீடணக் குழாத்தை வேரோடு சாய்ப்பாய்!
குருதியில் குளிப்பாய்! கொற்றவர் ஆண்ட
திருவினை நாட்டை மீட்பதில் அழிவாய்!

அவர் கனவு அப்படியே பலித்தது.குருதியில் குளித்தவண்ணம் புலிகள் தங்கள் திருநாட்டைமீட்கப் போராடி வருகிறார்கள். எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் தலைமையில் தமிழீழ இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இருபது ஆண்டுகளில் அந்தப் போராட்டம் வளர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 20 ஆண்டுக் காலத்தில் இந்தப் போராட்டம் எத்தகைய மகத்தான வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்பதைக் கவிஞர் இன்று இருந்து பார்த்திருந்தால் எவ்வளவு மனம் பூரித்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகிறது. தம்பி பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திவரும் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு வீரகாவியமே இயற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

[பழ.நெடுமாறன், "கவியரசர் என் காவலர்", தமிழ் முழக்கம் பதிப்பகம், சென்னை, 2001, பக். 65-68]