Saturday, September 16, 2006

தீபாவளி : வாரியார் விளக்கம்.

தீபாவளி

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

  1. சோமவார விரதம்
  2. உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
  3. திருவாதிரை விரதம் (மார்கழியில்)
  4. சிவராத்திரி விரதம் (மாசியில்)
  5. கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
  6. பாசுபத விரதம் (தைப்பூசம்)
  7. அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
  8. கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)

தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை

புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

8 comments:

said...

மிக அருமையான விளக்கம். வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தூண்டுகிறது.

விளக்கத்திற்கு மிக்க நன்றி வெற்றி.

said...

வெற்றி

நல்ல விளக்கம்.

நல்ல பதிவு.

நன்றி.

said...

இராகவன்,
வணக்கம்.

//வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தூண்டுகிறது.//

உண்மை. நானும் தீபாவளிக்கான உண்மையான காரணத்தை நேற்று வாரியார் அவர்களின் இப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி.

said...

சிவபாலன்,
மிக்க நன்றி.
//நல்ல விளக்கம்//
விளக்கம் வாரியார் சுவாமிகளுடையது.

said...

வெற்றி ஐயா,
வாரியாரின் விளக்கத்தை பதிவேற்றியதற்கு நன்றி.

//பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். //

வாரியார் குறிப்பிட்ட பெரும்பாலோருள் நானும் ஒருவன்.

said...

வெற்றி
எத்தனை வாரியார் இந்த உண்மையைச் சொன்னாலும்; அது பதிய சென்ற தீபாவளிவரை ;நமது மதகுருக்கள் விடுமாப்போல் இல்லை. நரகாசுர றீல் விட்டார்கள்; வரும் தீபாவளிக்கும் பூசை முடிந்ததும் சிற்றுரை யாற்றும் குரு; அளப்பார். வந்தவர்கள் கன்னத்தில் போட்டுக் கேட்பார்கள்.
ஆனால் யாராவது நடிகர்கள் நீங்கள் குறிப்பிடும் விடயத்தை தொலைக்காட்சியில் தோன்றிக் கூறினால் எடுபடும். நம்மக்கள் கோவில் சென்று ஆண்டவனாசி வாங்காமல் விட்டாலும் ,நடிகர்களின் ஆசிவாங்கத் தவறமாட்டார்கள். அவர்களும் தமிழைப் புழுக்கொடியல் போல் கடித்து விழுங்குவார்கள்.
யோகன் பாரிஸ்

said...

ரவி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//வாரியார் குறிப்பிட்ட பெரும்பாலோருள் நானும் ஒருவன். //

நானும் அப்படித்தான். இவ் விளக்கத்தைப் படிக்கும் வரை நானும் உண்மையான விளக்கத்தை அறிந்திலேன்.

said...

யோகன் அண்ணை,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உண்மைதான் நீங்கள் சொன்னது போல் எமது மக்களில் அதிகமானோர் கவர்ச்சிக்கும், போலிக்கும் மயங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மை.