Tuesday, August 28, 2007

இழந்த சொர்க்கம் : ஒரு புகைப்படக் கலைஞன் பார்வையில்

பல ஆயிரம் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாத விடயங்களை ஒரு படம் மூலம் சொல்லி விடலாம் என்பார்கள். அது போல இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வலியை இப் படத்தில் இருந்து நீங்கள் உணரலாம்.

Alex Wolf எனும் புகைப்படக் கலைஞர் இலங்கையில் தான் எடுத்த புகைப்படங்களை youtube ல் The Fallen Paradise எனும் தலைப்பில் ஏற்றியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Load ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். பொறுமை காக்க.

Friday, August 17, 2007

மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலில் பாவேந்தர் பாடல்கள் [வீடியோ]

"குழலினிது யாழினிது" என்பர் மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலைக் கேளாதோர். என்னே இனிமை! சொல்லை உச்சரிக்கும் விதம். வரிகளுக்குத் தகுந்தாற் போல குரலில் ஏற்ற இறக்கம். அம்மாடி, அவரின் குரல்வளத்தை வர்ணிக்க எனக்குத் தமிழறிவு இல்லை. தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து வளரும் பாடகர்கள், பாடகிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மதுரக் குரலோன் ஹனிபா அவர்கள் பாடிய பாவேந்தரின் இரு பாடல்களை youtube ல் பார்த்தேன். மெய்மறந்தேன். பல தடவைகள் கேட்டு/பார்த்து இரசித்தேன்.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பது போல நான் இரசித்த அப் பாடல்களின் youtube ஒளித்துண்டுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இப் பாடல்களை youtube ல் ஏற்றிய அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


தமிழுக்கும் அமுதென்று பேர்

சங்கே முழங்கு

Wednesday, August 15, 2007

விகிப்பீடியாவிலும் [Wikipedia] கைவைத்த CIA , வத்திக்கான்[Vatican]

உலகத்தில் பல சூழ்ச்சிகள் செய்யும் CIA ம் வத்திக்கானும் [Vatican] விகிப்பீடியாவிலும் [Wikipedia] தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அச் செய்தியைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

Tuesday, August 14, 2007

பெனாசீர் பூட்டோவின் நேர்காணல் வீடியோ

பாகிஸ்தான்[1947],இந்தியா[1947], இலங்கை[1948] போன்ற நாடுகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் சுதந்திரம் அடைந்தன. முறையே ஜின்னா, நேரு, D.S. செனநாயக்கா போன்ற தலைவர்கள் தமது நாடுகளில் ஆட்சி அமைத்தனர்.

ஆனால் இந்த மூன்று தலைவர்களிலும் அண்ணல் நேரு அவர்களே தொலைநோக்குப் பார்வையுடன் தனது நாட்டை வழிநடாத்தினார். இன்று இலங்கையும் பாகிஸ்தானும் உருப்படாத நாடுகள் [failed state] எனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு அந்த நாடுகளின் முதல் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகளே முக்கிய காரணம்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவெனின், இந்த மூன்று தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரே[same] சிக்கல்களையே எதிர்கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் அண்ணல் நேரு அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் மற்றைய தலைவர்களை விட அதிகம். ஆனாலும், அண்ணல் நேரு அவர்கள் இச் சிக்கல்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் கையாண்டதால் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தலைதூக்கிய பல சிக்கல்கள் இந்தியாவில் எழவில்லை.

அண்ணல் நேரு அவர்கள் இலங்கையில் பிறந்திருந்தால்.... நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இருந்தது போல சிங்கப்பூரை விட முன்னணி நாடாக இருந்திருக்கும்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்கள் தற்போதைய பாகிஸ்தான் நிலைமைகள், இன்ன பிற விடயங்களைக் கனேடிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார். இப் பேட்டி 18 நிமிடங்கள் நீளமானது.அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தமது நாடுகளின் அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய, பாகிஸ்தானிய நண்பர்களுக்கு என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Monday, August 13, 2007

மாலன் ஐயாவிற்கான எனது 2வது பின்னூட்டம்

மாலன் ஐயாவின் பதிவான "சொன்னது என்ன" என்ற பதிவில் அவர் சொன்ன கருத்துக்களுக்கான என் மாற்றுக் கருத்துக்கள். அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விடயத்திற்கும் சரியான ஆதாரங்களுடன் என் மாற்றுக் கருத்தை முன் வைப்பேன்.

வழமை போல மாலன் ஐயா சொன்ன கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் சொன்ன கருத்துக்கள் நீல எழுத்தில்.


மாலன் ஐயா,

பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஆத்திரப்படவில்லை. நான் எழுதியது ஆத்திர தொனியில் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நான் நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து பதிவு தயாரித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அப் பதிவை இவ் வார இறுதியில் பிரசுரிக்கிறேன்.

/* ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது, 1956ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே அறப்போர் நடத்தியதைப் போல, மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது ஏதும் போராட்டங்கள் நடத்தவில்லை */

நீங்கள் சொல்வது தவறு. அறப்போராட்டங்களை லங்கா சமஜமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி, இந்திய காங்கிரஸ் ஆகியன சேர்த்து நடாத்தின. அந்த அறப் போராட்டத்தின் நூறவது நாள் போராட்டம் பெரிய கூட்டத்துடன் நடந்தது. அதில் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"When parliament was dissolved and new elections were scheduled in 1952, based on the 1950 register, from which the preponderant majority of Indians were excluded, the Ceylon Indian Congress and the Federal Party launched a campaign to obtain voting rights for those Indian who had opted, under the law, to become citizens of Sri Lanka...A meeting at the Town Hall on August, 1952 to mark the 100th day campaign, united the opposition parties....Representative of the Communist Party[Pieter Keuneman], Federal Party [S.J.V. Chelvanayagam] and plantation labour leaders, S.Thondaman and A.Aziz also spoke on this occasion."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.159]

/* செல்வா அவர்கள் வைத்த தமிழ் அரசில், வடக்குக் கிழக்குப் பகுதிகளே இடம் பெற்றிருந்தன. மலையகம் இடம் பெறவில்லை என்ற கருத்தை பேராசிரியர் சிவசேகரம் இவ்வாறு சுட்டுகிறார், */

ஐயா, இலங்கை வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் மலையகம் சிங்களப் பகுதியில் உள்ள இடம். வடக்குக் கிழக்குத் தான் தமிழர்களின் பூர்வீக தாயகம். மலையகம் கண்டி இராச்சியத்தின் பகுதியில் இருந்த பகுதி. ஆகவே சிங்கள மக்களின் மண்ணை எமக்குத் தா என்று கேட்க முடியாது.

மலையகத் தமிழ்த் தலைவர்களும், இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் என்ன கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள் என்றால், தமிழர்களின் பூர்வீக மண்ணில் மாநில சுயாட்சி, மலையகத் தமிழர்களுக்கு மற்றைய பிரசைகள் போல், வாக்குரிமை, குடியுரிமை, சமவுரிமை. இந்த கருத்தொற்றுமையில் தான் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸ், செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தனர்.

/* அவர் ராஜினாமா செய்தாரா? இல்லை தமிழ்நேஷன் பதிவில் உள்ளதைப் போல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டாரா? */

"C.Sunderalingam...refrained from speaking in the debate ...but Sunderalingam who had serious reservations about the question resigned from the government... "
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.158]

தற்போது பணிமனையில் இருக்கிறேன். நான் மேலே சொன்னது போல உங்கள் அனைத்துக் கருத்துக்களுக்கும் இந்த வார இறுதியில் பதில் எழுதுகிறேன்.

ஐயா, மீண்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்கள் மீது எனக்கு ஆத்திரம் இல்லை. நான் உங்கள் மீது ஆத்திரப்படுவதாக நீங்கள் கருதுமளவுக்கு நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நீங்கள் என்னைவிட வயதில் முதிர்ந்தவர். அந்த வகையில் உங்கள் மீது எனக்கு மரியாதையும் மதிப்பும் உண்டு. உங்கள் கருத்துக்களுக்குத் தான் மாற்றுக் கருத்தைச் சொல்கிறேனே தவிர உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.

நான் அப்படித் தவறி, வரம்புமீறீ ஏதாவது சொன்னால் தயவு செய்து தயங்காது சுட்டிக் காட்டுங்கள்.

இக் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தவறான புரிதல்களை களையலாம் என நம்புகிறேன்.

/* யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களிடமிருந்த தமிழ்நேய்த்திற்கு இந்த தரவுகள் போதுமா? */

மேலே சொன்னது போல், இவ் வார இறுதியில் பதிலளிக்கிறேன்.

மிக்க நன்றி.
மாலன் ஐயாவிற்கான 2வது பின்னூட்டத்தில் நான் சொல்ல மறந்தது.

மாலன் ஐயா அவர்கள் மேலே "ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் ..." எனச் சொல்லியிருக்கும் கருத்தே மிகவும் தவறானது. தனிச் சிங்களச் சட்டத்தால் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள் எனும் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்.

இச் சட்டத்தால் இலங்கையின் சனத்தைகையில் 30% மக்கள் பாதிக்கப்பட்டனர். அதாவது இலங்கையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து[இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்] மக்களும் இச் ச்ட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

அடுத்தது மாலன் ஐயா தவறாகப் புரிந்து கொண்ட விடயம் என்னவெனின் இத் தனிச் சிங்களச் சட்டம் ஏதோ வேலைவாய்ப்புத் தேடிய தமிழ்மக்களைத்தான் மட்டும்தான் பாதித்தது என்பது.

இச் சட்டத்தால் தமிழ்மக்கள் ஏதாவது அலுவலகத்துக்குப் போனால்கூட சிங்களத்தில்தான் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது சொந்த மண்ணிலேயே தமக்குப் புரியாத மொழியில் பேச வேண்டிய கட்டாயத்தை அனைத்துத் தமிழ்மக்கள் மீதும் திணித்தது. அதனால் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுமே இச் சட்டத்தை எதிர்த்தனர்.

ஆக, மாலன் ஐயா அவர்களின் மேலுள்ள கருத்தைப் பார்க்கையில் அவருக்கு இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிச் சரியான புரிதலோ[understanding] அல்லது போதிய அறிவோ[knowledge] இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிலவேளைகளில், அவருக்கு வரலாறு தெரிந்திருந்தும், வரலாற்றைத் திரித்து, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டது குறிப்பிட்ட பகுதி தமிழ்மக்களே எனவும், இப் பிரச்சனைக்கு எதிராகப் போராடிய தமிழர்கள், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடவில்லை எனும் மாயையை ஏற்படுத்த முனைகிறாரா எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த தனிச் சிங்களச் சட்டத்தால் கொழும்பில் அலுவலகத்திற்குச் சென்ற தமிழ் நீதிபதி ஒருவரின் நிலை என்னவென்பதை கீழே படியுங்கள்.

'I went to the office of the Government Agent in Colombo in July 1973. In order to find my way to the officer whom I wanted to meet, I saw a board in Sinhala only. I enquired in English from the clerk who was seated behind the counter as to what it said. His reply in Sinhala was “don’t you know how to read Sinhala?” I replied in English that I cannot understand what he said. He said in Sinhala: “Go and learn Sinhala and come back.” A bystander then told me what the board conveyed.’
Mr. V. Manicavasagar, former Supreme Court Judge, quoted in document by Ceylon Institute of National and Tamil Affairs for the International Commission of Jurists, 1974.

மாலன் ஐயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டம்

மாலன் ஐயா அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி இல்லாத பொய்களை எழுதி வருவது பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் "சொன்னது என்ன" என்ற பதிவில் ஒரு பின்னூட்டத்தில் எழுதிய பொய்யுக்கு நான் மறுத்து எழுதிய பின்னூட்டம் இது.

மாலன் ஐயா அவர்கள் எழுதிய கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் எழுதிய கருத்துக்கள் நீலத்தில்.


மாலன் ஐயா,

/* இவர்களுக்கு வாக்குரிமைகள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்தத் தமிழர்களுக்காக யாழ்ப்பாணத் தமிழார்கள் போராடினார்களா? */

வரலாற்றைத் தெரியாவிட்டால், தயவு செய்து தெரிய முயலுங்கள். இல்லாத பொய்யை அவிட்டு விடாதீர்கள். வழமை போல வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

தந்தை செல்வநாயகம் எதிர்த்துப் பேசியது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தார். அது தெரியுமா உங்களுக்கு?

தந்தை செல்வா இச் சட்டத்தின் போது பேசிய நாடாளுமன்ற உரையைப் படித்திருக்கிறீர்களா? "இன்று எமது சகோதரர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் படுகிறது. நாளை இது எமக்கும் நடக்கும்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது இலங்கை நாடாளுமன்றக் குறிப்பிலேயே உள்ளது.

மலையக மக்களின் உரிமை பறிக்கப்படும் மசோதவை எதிர்ப்பதற்காக 'அடங்காத் தமிழன்' என அழைக்கப்படும் C.சுந்தரலிங்கம் அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது தெரியுமா?

1958ல் பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே தந்தை செல்வா அவர்கள் இலங்கையில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும்[மலையகத் தமிழர்கள்] இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அது தெரியுமா உங்களுக்கு?

எப்படித்தான் தெரியாத விடயங்களை எல்லாம் உறுதி செய்யாமல் உங்களால் எழுத முடிகிறதோ? இதுதான் உங்களின் 35 வருட பத்திரிகைத் துறை அனுபவமா?

Sunday, August 12, 2007

"சிறீலங்கா அரசு ஓர் இனவாத அரசு" - பாரதிய ஜனதாக் கட்சி [BJP]


இந்தியா சிறீலங்காவுக்கு ஒரு போதும் படைத்துறைத் தளபாடங்கைள வழங்கக்கூடாது என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கைக்கும் போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசு ஓர் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிற அரசாக செயற்படுகின்றது. சிறீலங்கா அரசு சிங்களவரையும் தமிழர்களையும் சமனாக மதிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்க வழங்கப்பட்ட பொருட்களைக் கூட சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலைமையோடு செயற்பாட்டு இனப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு ராடர்களை வழங்கியுள்ளது. இந்தியா வழங்கும் படைத்துறை உதவிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கே பயன்படுகின்றன. ஆகவே இந்தியா இலங்கைக்கு படைத்துறை உதவிகளை வழங்கக்கூடாது எனவும் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்


ஆதாரம்: பதிவு

படம் : த ஹிந்து

Friday, August 10, 2007

பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும்

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் அதிபர் முஷ்ரப் அரசுக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்துவரும் சம்பவங்கள் பல அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாகியதிலிருந்து நீண்ட காலமாக நீதிமன்றங்கள் அரசின் எடுபிடியாகவே செயற்பட்டு வந்தன. அரசில் இருப்பவர்கள் குறிப்பாக இராணுவ ஆட்சியாளர்கள் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும், தம் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களை அடக்குவதற்கும் நீதிமன்றங்களையே கருவியாகப் பயன்படுத்தினர்.

ஆனால் அவ் வழக்கம் 2005ல் இருந்து மாறத் தொடங்கியது. 2005ல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற இவ்ரிகார் மொகமட் செளத்திரி அவர்கள் அரசின் எடுபிடியாக இல்லாமல் சுயாதீனமாக செயற்படத் துவங்கினார். அவர் 2005ல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற போது, "நீதித்துறைக்கும் மக்களுக்குமிடையிலான நம்பிக்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது...பாகிஸ்தான் தனது தார்மீக இலட்சியத்தைத் தொலைத்துவிட்டது..." என்று தெரிவித்திருந்தார்.

"There is a serious crisis of confidence between the people and the judiciary...Pakistan had lost its 'moral moorings'...people craved high offices and exalted positions just to demonstrate their superiority over others"
[BBC , Pakistanis 'dismayed' with courts, Thursday, 30 June, 2005]

முஷ்ரப் அரசு முன்னெடுத்த பல மக்கள் விரோத சட்டங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார் செளத்திரி. குறிப்பாக கைது செய்யப்பட்ட பின் காணாமல் போன அல்லது உறவினர்களுக்குத் தெரியாமல் வதை முகாம்களில் தடுத்து வைத்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பிறப்பித்த ஆணை போன்றன அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

நீதிபதி செளத்திரி அவர்கள் முஷ்ரப் அரசின் விருப்பத்திற்கு மாறான தீர்ப்புக்களை வழங்கி வருவது முஷ்ரப்பை ஆத்திரமடைய வைத்தது. குறிப்பாக இந்த வருட இறுதியில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் முஷ்ரப், தனக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்லக் கூடிய ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டார். அதன் முதற்கட்டமாக நீதியரசர் செளத்திரி மீது பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, நீதிபதிப் பொறுப்பிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தார். செளத்திரியின் இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இறுதியில், செளத்திரியை இடைநீக்கம் செய்தது தவறானது என்றும் அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பு பாகிஸ்தானின் சட்ட/நீதித்துறை[ judiciary ] வரலாற்றிலேயே ஒர் திருப்புமுனை எனவும் , பாகிஸ்தானின் நீதித் துறையில் எதிர்காலத்திலும் இத் தீர்ப்பின் விளைவுகள் இருக்கும் என பாகிஸ்தான் சட்ட மேதைகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

"Legal experts are of the opinion that the judgement marks a watershed in Pakistan's legal history and will have far reaching implications for the rule of law in the country. "
[ BBC, Musharraf faces legal nightmare, Friday, 20 July 2007]

முஷ்ரப் தனது சொந்த நலனுக்காக, மக்கள் விரோதச் சட்டங்களை அமுல்படுத்தியும், மக்களின் உரிமைகளைப் பறித்து, தனக்கு எதிரானவர்களை தனது அதிகாரத்தைப் பாவித்துப் பழி வாங்கி நாட்டைச் சீரழிக்க முற்பட்டதை பாகிஸ்தான் உய்ர் நீதிமன்றம் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

ஆனால் இதே போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடந்த போது, குறிப்பாக சிங்கள அரசுகள் புத்த சிங்களவர்களின் நலன்களை முன்னிறுத்தி அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகச் சட்டவிரோதமாகச் செற்பட்டு அவர்களின் உரிமைகளைப் பறித்த போது இலங்கை நீதிமன்றங்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சனை பற்றி கருத்துத் தெரிவிப்போர் பலர் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமைக்கு புத்த பிக்குகளும் சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம் என்கின்றனர். அவர்கள் இலஙகையின் நீதித்துறை[ judiciary ] விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்த அர்யுனா கன்னங்கரா அவர்கள் புத்த பிக்குகளாலும், அரசியல்வாதிகளாலும்தான் இன்று நாடு இந்த மோசநிலையில் உள்ளது என்று லண்டன் கார்டியன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

" ... General Sooriyabandara is right in blaming the politicians for this pointless war. But the Buddhist clergy must also share the blame. Their rabble-rousing nationalism has egged on countless politicians and the Sinhalese Buddhist majority to undertake the most foolhardy and destructive policies against the Tamil minority. "
[Arjuna Kannangara, Tamil State Inveitable, Guardian, May 18, 2000]

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையின் இன்றைய மோச நிலைக்கு இலங்கையின் நீதித் துறையே முக்கிய பொறுப்பு. ஏனெனில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இலங்கைச் சிங்கள அரசுகள் அறிமுகப்படுத்தி அமுல்படுத்திய சகல சட்டங்களும் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானவை. இந்த ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் அச் சட்டங்களை அமுல்படுத்தாமல் தடுத்திருக்கலாம். சிங்கள அரசுகளின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் இலங்கையின் நீதிமன்றங்களும் சிங்களவர்களால் ,சிங்களவர்களின் நலன்களைப் பேணுவது எனும் குறிக்கோளோடே இயங்கின.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து , 1972 வரை சோல்புரி அரசியல் யாப்பே அமுலில் இருந்தது. சோல்புரி அரசியல் யாப்பின் 29வது பிரிவின் படி, இலங்கை அரசு, சிறுபான்மை மக்களின் நலன்களையோ அல்லது உரிமைகளையோ பாதிக்கும் சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது.

ஆனால் "இலங்கையின் தந்தை"[Father of the Nation] என சிங்களவர்களால் அழைக்கப்படும் D.S.செனநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு முரணாக மில்லியன் தமிழர்களின்[தமிழகத் தமிழர்கள்] குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த போது இலங்கையின் நீதித்துறை அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

அதன் பின், சிங்களவர்களல் "சமூகப் புரட்சி நாயகன்"[Champion of Social Revolution] எனப் புகழப்படும் பண்டாரநாயக்கா அவர்கள் அரசியல் யாப்பின் விதிகளுக்குப் புறம்பாக தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய போதும் இலங்கையின் நீதித் துறை அதைக் கண்டு கொள்ளவில்லை.

பின்னர் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு விரோதமாக கிறிஸ்தவ பாடசாலைகளை அரசுடமையாக்கிய போதும் நீதித்துறை மெளனமே சாதித்தது.

தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இச் சட்டங்களை அன்றே இந்த நீதிமன்றங்கள் தடுத்திருந்தால் இலங்கையில் சிலவேளைகளில் இன்று இரத்த ஆறு ஓடாமல் இருந்திருக்கும்.

1960 களில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சம உரிமை வேண்டிப் போரிட்ட போது [Civil Rights Movement] , அமெரிக்க அரசியல்வாதிகள் செயற்பட முன்னரே நீதிமன்றங்கள் கறுப்பின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படத் துவங்கின. அதுவே அரசியல்வாதிகளையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வழி கோலியது.

"குறிப்பாக சிறுபான்மை மக்கள் தமக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த [எண்ணிக்கை] பலம் இல்லாத போது நீதித்துறை அச் சட்டங்களைத் தடுத்து நிறுத்துவது மிக மிக அவசியம், இப்படியான நேரத்தில் நீதிமன்றங்களைத் தான் அவர்கள் நம்பியுள்ளார்கள்" என்கிறர் 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள்.

"The role of the judiciary becomes extremely important where the normal political processes are likely to lead to injustice to minority and marginalised groups who do not have the power to resist majoritarian imperatives...In such instances people, or communities, who suffer from an injustice have nowhere to go to obtain redress. Therefore, in the interests of good governance, it is incumbent on the judiciary to take an activistic stance and be especially vigilant of those laws passed by parliament which impact upon minority and marginalised groups for whom the normal checks and balances of democracy do not function very effectively. "
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

பாகிஸ்தான் நீதித்துறை முஷ்ரப்பின் சுயநல, மக்கள் விரோத , நாட்டைச் சீரழிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியது போல இலங்கையின் நீதித்துறையும் செயற்படுமா என்றால், அண்மைய சம்பவங்கள் இல்லையென்றே சொல்ல வைக்கிறது.

அண்மையில் திருகோணமலை போன்ற தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமித்த சிங்கள இராணுவத்தினர் தமிழ் மக்களைப் பலவந்தமாக வெளியேற்றி அப்பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்", "சிறப்பு வர்த்தக மையம்" என அப்பகுதிகளை அறிவித்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது குடியிருப்புக்களை சிங்கள அரசு இப்படிச் சூறையாடுவதை தடுக்க இலங்கை நீதித் துறையை நாடிய போது, அவ் வழக்கை விசாரனைக்கே எடுத்துக் கொள்ள முடியாது என இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் , நீதித்துறையும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க வன்முறையை நாடும் அவலநிலைக்குத் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
"

எனத் தமிழ் வேதம் சொல்கிறது. ஆனால் மாறும் உலக நடப்புக்களை அறிந்து தாமும் அதற்கேற்ப நடந்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றாது செக்கு மாடுகள் போல பல தசாப்தங்களாக இனவாதம் , புத்தமதவாதம் எனும் பழைய பல்லவியையே சிங்கள அரசியல்வாதிகள் , புத்த மத குருமார், மற்றும் இலங்கை நீதித்துறையினர் பாடி வருகின்றனர்.

நீதித்துறை நடுநிலமையாக , சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேணும். 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள் இப்படிச் சொல்கிறார்:

"ஆனால் உண்மை என்னவெனின், மக்களின் நலன்கள், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது, இலங்கையில் நடப்பது போன்று,சிறுபான்மையினர் அரசினால் வஞ்சிக்கப்படும் போது நீதித்துறை நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையின் இன்றைய அவலநிலைக்கு இலங்கையின் நீதித்துறையும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது நீதித்துறை முறையாகச் செயற்படவில்லை. மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் வன்முறையை நாடுகின்றனர்"

"But the fact that the judiciary must act, and act vigorously especially when minority rights and human rights are at stake, is clear from the history of the law making in this country. The judiciary has to ensure that there is fairness in law making and in the implementation of the laws, so that people belonging to marginalised groups or to ethnic communities do not feel that they are especially targetted for punitive, discriminatory or unfavourable measures. The judiciary has to take its share of responsibility for the parlous state of the country today owing to what they failed to do in the past. It is when people feel that they have no redress regarding the injustices they are subjected to that they take to violence."
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையின் வரலாற்றில் தமிழரின் ஆட்சியில்தான் நீதி தழைத்தோங்கி , மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் சுவாரசியமான தகவலையும் சுட்டிக்காட்டுகிறார் 'கலாநிதி' ஜெகன் பெரரா.

"சமீபத்தில் நடந்த கலந்துரையாடலொன்றின் போது இலங்கை எந்த ஆட்சிக்காலத்தில் நீதி நிலைத்து, மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் கேள்வி கேட்கப்பட்டது. இலங்கையின் பழைய வரலாற்றைப் பற்றிப் பெருமைப்படுபவர்களால் இப்படியான நல்ல பல ஆட்சிக் காலங்களை எடுத்துரைக்க முடியும். ஆனாலும் சோகமான உண்மையென்னவென்றால், எந்த மன்னனின் தோல்வியை பெரிய வெற்றி என்றும் நாட்டின் ஒற்றுமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லப்படுகிறதோ அந்தத் தமிழ் மன்னனான [தோற்ற மன்னன்] எல்லாளனுடைய காலமே மிகச் சிறந்த பொற்காலம். சிங்கள புனைநூலான மகாவம்சம் கூட எல்லாளன் நீதி தவறாது ஆட்சி புரிந்தார் என்கிறது. பசு மாட்டுக்குக் கூட அவரின் ஆட்சியில் நீதி கிடைத்தது எனச் சொல்லப்படுகிறது"

"At a recent discussion on governance in Sri Lanka the question was asked, when was the golden of human rights in the country? Those who take pride in Sri Lanka's ancient history might be able to point out that there were indeed many such periods in the country's past. Ironically, the period of the Tamil King Elara, whose defeat is seen as a great triumph of national unification may have been one of those golden periods. The King reigned "justly" records the Mahavamsa, and even a cow whose calf was run over by a speeding chariot could gain justice against the King's own son"
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையில் மீண்டும் எல்லாளன் ஆட்சிக் காலம் போல் வருமா? இலங்கை நீதித்துறை எல்லாள மன்னனைப் போல செயற்படுமா? இலங்கையின் நீதிபதிகள் பாகிஸ்தான் நீதியரசர் செளத்திரியின் முன்மாதிரியைப் பின்பற்றுவார்களா?

Sunday, August 05, 2007

கானா பிரபா, குமரன் ஆகியோரைத் தொடர்ந்து BBC யிலும் விபுலானந்த அடிகள் பற்றி...

நண்பர் கானா பிரபா அவர்கள் விபுலானந்த அடிகளார் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு அருமையான கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அக் கட்டுரையில் இருந்த விபுலானந்த அடிகளாரின் பாடல்களைப் படித்து மெய்மறந்த அருமை நண்பர் குமரன் அவர்கள், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பது போல் அப் பாடல்களுக்கு எளிய தமிழில் அழகாக விளக்கம் எழுதியிருந்தார்.

குறிப்பாக வெள்ளை நிற மல்லிகையோ எனும் பாடல் என் மனதில் ஒரு பத்தியுணர்வை ஏற்படுத்தியிருந்தது.

BBC தமிழோசையில் விபுலானந்த சுவாமிகள் பற்றி ஒரு ஒலி நிகழ்ச்சிசைக் கேட்டேன். அதில் இப் பாடலைக் கேட்டேன். உண்மையில் மெய் சிலிர்த்தது. அப் பாடலைப் பல முறை கேட்டேன்.

அந்த நிகழ்ச்சியை நீங்களும் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Friday, August 03, 2007

அரோகரா!... முருக பத்தர்களுக்கு வந்த சோதனை! [புகைப்படங்கள்]

கதிர்காமக் கந்தனின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கையின் தமிழ் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா [வடக்கு கிழக்கு மாகாணங்கள்] போன்ற பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கால் நடையாக பாத யாத்திரையாகச் சென்று அங்கே ஓடுகின்ற புண்ணிய ஆறான மாணிக்க கங்கையில் நீராடி முருகனை வணங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

இந்த வருடமும் தமிழ்ப் பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கதிர்காமம் சென்றனர். அங்கே இத் தமிழ்ப் பத்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடும் போது சிங்கள பொலிஸ் அதிகாரியால் தாக்கப்படும் காட்சியையே கீழே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

பத்தர்களைக் கொடுமை செய்த அசுரர்களை அழிக்க வந்த வேலவனே, உன் பத்தர்கள் சிங்கள இனவெறியர்களால் தாக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்?





இப் படங்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் [Daily Mirror, Friday, August 03, 2007 ] ல் இருந்து எடுத்தவை.

Thursday, July 26, 2007

பிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்



படத்தில் சிங்களத்தில் எழுதியிருப்பது :- "அதி சிறந்த பெளத்தவாதியின் மிகப்பெரிய துரோகம்"

இடமிருந்து வலம்: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அருகில் [நீல மேலாடையுடன்] மங்கள சமரவீர. இவர் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு அரும்பாடுபட்டவர். பின்னர் ராஜபக்சவுடன் பிரச்சனைப் பட்டு புதிய கட்சி துவங்கி ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கூட்டு வைத்துள்ளார்.


அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசியல்கட்சிகள் இனப்பிரச்சனையை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். தாம் தான் உண்மையான சிங்கள இனக் காவலன் என்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டுவர்.

மேலே உள்ள கேலிப்படங்கள், இன்று கொழும்பில் நடந்த ரணில்-மங்கள சமரவீர கட்சிகளின் ராஜபக்ச அரசுக்கு எதிரான கண்டனப் பேரணியில் எடுத்த படங்கள். ராஜபக்ச புலிகளுக்கும் தமிழர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்பதும் இன்றைய பேரணியின் ஒரு சாரம்.தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் "பயங்கரவாத்தை" சரியாக 9 மாதங்களுக்குள் அடக்கிவிடுவோம் என்கின்றனர் ரணிலும் மங்கள சமரவீரவும்.

படங்கள் Tamilnet.com ல் இருந்து எடுத்தவை.

Wednesday, July 25, 2007

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை
ஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் கத்தோலிக்கர் இல்லை
ஹிட்லர் தொழிற்சங்கவாதிகளைத் தாக்கிய போது நான் அதை எதிர்த்துக் குரலெழுப்பவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி இல்லை
ஹிட்லர் என்னையும் என் மதத்தையும்[Protestant] தாக்கியபோது யாரும் எனக்காகக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் உயிருடன் இல்லை."

--- Martin Niemöller

ஜெர்மனியின் மனிதவுரிமைவாதியும் கிறிஸ்தவ பாதிரியுமான Martin Niemöller சொன்னவை [மேலே] யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்.

இலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்காமல் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சில இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் சோகமான வரலாறு.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கை மண்ணின் பூர்விக இரு இனங்கள். எனவே சிங்களவர்கள் ஒருபோதும் தமக்கெதிராகச் செயற்படமாட்டார்கள், செயற்படவும் முடியாது என்பதும் தாம் சிறுபான்மை இனம் இல்லை என்பதும் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.

"...the Tamils looked on themselves as one of the two 'founding races' of the island and not as a minority"
[Dr.Alfred Jeyaratnam Wilson, SRI LANKAN TAMIL NATIONALISM : Its Origins and Developments in the 19th and 20th Centuries, p.48]

'நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்துதாம்' என்பது போல் இந்த எண்ணமும் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது குரெலெழுப்பாமல் இருந்ததற்கு ஒரு காரணம். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் கிடைத்த போதும் அச் சந்தர்பங்களை நழுவவிட்டதற்கும் இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் அதன் அடிப்படைப் பிரச்சனை இனமோ, மதமோ, மொழியோ அல்ல. அப் பிரச்சனைகளின் முக்கிய ஆணிவேர் பொருளாதாரம்[சிங்களவர்கள் மத்தியிலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம்]. ஆனால் சிங்கள பேரினவாதிகள் இப் பொருளதாரப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றைய சிறுபான்மைக் குழுக்களால்தான் சிங்களவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியும், வேலையில்லாமலும் இருப்பதற்குக் காரணம் என சிங்கள மக்களை மூளைச் சலவை செய்தனர். எந்த ஒரு சிறுபான்மை இனத்தைத் தாக்க முன்னும் அவர்களுக்கு எதிராக இப்படிப் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பின்னர் அச் சிறுபான்மை இனத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுதான் இலங்கையின் எல்லாச் சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட உத்தி.

ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம்.

1983 ம் ஆண்டு நவீன இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இன அழிப்பு கொழும்பின் வீதிகளில் நடந்தேறியது. இக் கலவரம் நடந்த காலத்திலிருந்து சரியாக[exactly] 100 ஆண்டுகளுக்கு முன் 1883ல் கொழும்பு வீதிகளில் சிங்களப் பேரினவாதிகளும் கிறிஸ்தவர்களும் மோதிக் கொண்டார்கள். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதற்கட்டத் தாக்குதல்கள் புத்த பிக்கு மிகெத்துவத்த குணானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1870 ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும் , பேசியும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார் குணானந்தா. 1883 ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு வாரத்தில் [Easter Week] கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த போது, அத் தேவாலத்திற்கு மிகவும் அருகில் பிக்கு மிகெத்துவத்த குணானந்தா புத்த பூசையை நடாத்தினார். இது தமது பிரார்த்தனையைக் குழப்புவதற்காக வேணும் என்றே பிக்கு மிகெத்துவத்த குணானந்தா செய்கிறர் என கிறிஸ்தவர்கள் சினம் கொண்டனர். இரு தரப்புக்குமிடையில் கலவரம் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டார். 12 பொலிஸ்காரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டாம் கட்டத் தாக்குதல்கள், பிரச்சாரங்கள் புத்த மறுமலர்ச்சித் தலைவர்களான அங்கரிக தர்மபால,வாலிசிங்க ஹரிச்சந்திரா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும், ஊர் ஊராக நாடகங்கள் நடாத்தியும், கூட்டங்கள் வைத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1902ல் தர்மபால இப்படி எழுதியிருந்தார்:

"...அழகான, ஒளிமயமான இத் தீவு மோசமான நாசகார வெள்ளையர்கள்... போன்றோரால் சிதைக்கப்படுவதற்கு முன் ஆரிய சிங்கள இனத்தால் சொர்க்காபுரியாக கட்டியெழுப்பப்பட்டிருந்தது...இன்று நாட்டில் நடக்கும் கொள்ளைகள், விபச்சாரம், மிருகக் கொலைகள், பொய்சொல்லுதல், மதுபோதை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு கிறிஸ்தவர்களே காரணம்...தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்காக காட்டு வளங்களை அழிக்கிறார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்க்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்..."

"...This bright, beautiful island was made into a Paradise by the Aryan Sinhalese before its destruction was brought about by the barbaric vandals...Christianity and polytheism are responsible for the vulgar practices of killing animials, stealing, prostitution, licentiousness, lying and drunkenness...The bureaucratic administrators...have cut down primeval forests to plant tea; have introduced opium, ganja, whisky, arrack and other alcoholic poisons; have opened saloons and drinking taverns in every village; have killed all industries and made the people indolent."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.121]

1883ம் ஆண்டிற்குப் பின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1903ம் ஆண்டில் இலங்கையின் பல சிங்களப் பகுதிகளிலும் அரங்கேறியது. சிங்களப் பகுதிகளில், குறிப்பாக புத்த ஆலயங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு எதிராக இவ் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டார் என புத்த மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வாலிசிங்கா ஹரிச்சந்திரா கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் 1950, 1960 களிலும் இன்றும் ஆங்காங்கே சிங்களப் பேரினவாதிகளல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மற்றைய சிறுபான்மைக் குழுக்களுடனான மோதல்களினால் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தும், மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சிங்கள புத்தர்களின் மனங்களில் உண்டு என்கிறார் குமரி ஜெயவர்த்தனே.

"While in recent years the people have been distracted by attacks on other minorities, it is nevertheless true that the anti-Christian prejudices, though dormant, still remain strong in the consciousness of Sinhala Buddhists."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.122]

சரி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களினால் கணிசமான வெற்றியைப் பெற்ற பின் சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இலங்கையின் அடுத்த சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், மற்றும் வட இந்திய , பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள்[immigrant] மீது திரும்பியது. முஸ்லிம்கள் மற்றும் வட இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீது என்ன காரணத்திற்காகச் சிங்கள பேரினவாதிகள் கவனம் திரும்பியது எனபதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Thursday, July 19, 2007

புகைப்படப்பிடிப்புப் போட்டிக்காக...

"பாடறியேன். படிப்பறியேன். பள்ளிக்கூடம்தான் அறியேன்." என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு திரைப்பாடலில் சொல்லியிருந்தது போல், புகைப்படக் கருவிகள் [Camera] பற்றியோ அல்லது எப்படிப் புகைப்படம் எடுப்பது என்பது பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். இருப்பினும் என் மனதில் எழும் எண்ணங்களை, பிடித்த காட்சிகளைப் படம்பிடிக்கிறேன் என்று சும்மா கண்டபாட்டுக்கு கமராவில் கிளிக் செய்வது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி எடுத்த படங்களில் இரண்டு படங்கள்தான் நீங்கள் கீழே பார்ப்பவை.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
"மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ!
...
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி"
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா.
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா! ஆனந்தம்! "
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
இந்தப் பாலத்திலிருந்துதான் முதலாவதாக இருக்கும் படத்தை எடுத்தேன்.

Thursday, May 10, 2007

விலகல் அறிவிப்பு!!!!

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் அவர்கள் எதிர்வரும் யூன் மாதம் 27ம் திகதி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

"There is only one government since 1945 that can say all of the following: more jobs, fewer unemployed, better health and education results, lower crime, and economic growth in every quarter. Only one government, this one."

--- British Prime Minister Tony Blair

"1945ம் ஆண்டிற்குப் பின் ஒரே ஒரு அரசாங்கம் மட்டுமே பின்வரும் அனைத்தையும் சொல்லலாம்: அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கியமை, மிகக் குறைந்த வேலையில்லாதோர் தொகை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த தரமான முன்னேற்றம், குறைந்த குற்றச் செயல்கள், அனைத்துத் துறையிலும் பொருளாதார வளர்ச்சி. அந்த ஒரேயொரு அரசு, இந்த அரசு மட்டுமே."

--- பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர்

"I think a lot of people will look back on the last 10 years of dashed hopes and big disappointments, of so much promised so little delivered."

----- David Cameron, Conservative leader

சில புகைப்படச் செய்திகள்

அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் [Richard Boucher] அவர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் [Robert O' Blake] அவர்களும் யாழ்ப்பாண நூல்நிலயத்தின் பல்கணியில்[balcony] நிற்பதை மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். படத்தின் பின் புறத்தில் தெரிவது தந்தை செல்வாவின் நினைவுச் சிகரம்.


இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்
யாழ்ப்பாண ஆயர் வணபிதா தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுடன் யாழ் நிலமைகள் பற்றிக் கேட்டறிந்தார் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள். யாழ் நூல்நிலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள் யாழ்ப்பாண அரச அதிபர்[Jaffna Government Agent] திரு. கணேஸ் அவர்களை அரச அதிபர் பணிமனையில் சந்தித்து யாழ் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாண அரச அதிபர் கணேசுடன் அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட்பெளச்சர்.
இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் கொழும்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவைச் சந்தித்த போது எடுத்த படம்.
கொழுப்பு நகரம் புலிகளின் வான்படைத் தாக்குதலினால் இருள்மயமான போது கொழும்பில் வசிக்கும் மக்கள் வீதியில் வந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
கொழும்பில் புலிகளின் வான் தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர்.
அன்பர்களே, இது வானவெடி வேடிக்கைகள் இல்லை. கொழும்பில் புலிகளின் வான்படைகள் தாக்கிய பின்னர் சிங்களப் படைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் வான் நோக்கிச் சுடுவதையே படத்தில் காண்கிறீர்கள்.
அண்மையில் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில் புலிகளின் பிரதிநிதிகளை பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு அழைப்பது எனவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த பிரிட்டன் உதவும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இனியும் இலங்கை பிரிட்டனின் குடியாதிக்க நாடு இல்லையெனவும் பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் வற்புறுத்தி சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பி கொழும்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவராலயம் முன் நடாத்திய கண்டனப் பேரணியையே படத்தில் காண்கிறீர்கள்.
பிரிட்டனுக்கு எதிரான கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் மகளிர் அணி.
புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் சில ஈழத்தமிழர்களை பிரான்சு அரசு அண்மையில் கைது செய்து இருந்தது. தமிழர்களைக் கைது செய்ததற்கு பிரான்சுக்கு நன்றி தெரிவித்து கொழும்பில் புத்த பிக்குகள் நடாத்திய ஊர்வலம்.
சிங்கள அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழ் நகரமான வவுனியாவில் கொலை செய்யப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்த தமிழரின் சடலத்தை இலங்கைப் பொலிஸார் பார்வையிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் நிருபரைச் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. அவரின் இறுதிச் சடங்கில் அவரது தாயார் கண்ணீர் வடிக்கும் காட்சி.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படையின் தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்தையும் அங்கே சிங்களப் படைகள் காவல் காப்பதையும் படத்தில் காண்கிறீர்கள்.
இப் படங்கள் எடுத்த தளங்கள் :- Tamilnet, AFP

Friday, May 04, 2007

அண்ணன் வைகோ அவர்களின் உரை வீடியோவில்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் வழிவந்த, மதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களின் உரை.


பாகம்-1

Thursday, May 03, 2007

தமிழர்களின் வான்படை: The Economist சஞ்சிகை

தமிழ்ப்படையின் வான் தாக்குதல்களால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக The Economist சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்ப்படையின் வான் தாக்குதல்களைச் சமாளிக்க சிங்கள அரசு பாதுகாப்புக்கான செலவை இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும், இதனால் deficit [பற்றாக்குறை] 8.4% ஆக உயரும் எனவும் இக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Economist சஞ்சிகையில் வந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Wednesday, May 02, 2007

அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

இந்த விவரணப்படம்[Documentary] BBC யில் ஒளிபரப்பானது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்த விவரணப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே இங்கே பதிவாகப் போடுகிறேன்.

இந்த விவரணப்படம் இலங்கை பற்றிய வரலாறு. குறிப்பாக தமிழ்-சிங்கள உறவு எப்படிச் சீரழிந்தது என்பதைச் சொல்கிறது இந்த விவரணப்படம்.

நீங்கள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவரோ, எதிரானவரோ அல்லது ஈழப்போராட்டம் பற்றி அக்கறை இல்லாதவரோ யாராக இருப்பினும் இவ் விவரணப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். ஈழப் போராட்டம் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள இந்த விவரணப்படம் உதவும் என நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

இவ் விவரணப்படம் இனப்பிரச்சனை பற்றி முழு விபரங்களைத் தராவிடினும் சில அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.

உங்களின் அறிவுப் பசிக்கு ஒரு தீனி இந்த விவரணப்படம்.

மிக்க நன்றி.


பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4

இன்னும் தொடரும்...

Sunday, April 29, 2007

இன்னும் 30 ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் கடலுக்குள் மூழ்கிவிடும்!

"எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்களில் இல்லாமல் போக்கூடிய மண்ணுக்காக (சிங்கள)அரச படைகளும் விடுதலைப்புலிகளும் அடிபட்டுச் செத்து மடிகின்றனர்" என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே.["Government troops and the LTTE fighting over land in the north and the east that may soon not even be there."]

பேராசிரியர் மோகன் முனசிங்கே அவர்கள் ஐக்கிய நாடுகள்[ஐ.நா] சபையின் Intergovernmental Panel on Climate Change (IPCC) எனும் அமைப்பின் உப-தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடல் நீரின் மட்டம் அரை மீற்றரால் உயருகின்றது, வறண்ட பகுதிகள்[dry zone] மேலும் வறண்ட பிரதேசங்களாகவும் குளிர்மையான பிரதேசங்கள்[wet areas] மேலும் குளிர்மையான பிரதேசங்களாகவும் மாறி வருகிறது. இதனால் குளிர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்குகளும், வறண்ட பகுதிகளில் வறட்சிக் கொடுமைக்கும் வழிவகுக்கும். சூழலில்[atmosphere] அதி கூடிய வெப்பநிலையால் [Higher temperatures] தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடையும்.

நாட்டின்(இலங்கை)சுகாதார நிலமைகள் மிகவும் மோசமடையும். வறண்ட பிரதேசங்களில் இருந்து நுளம்புகள் குளிர்ப்பகுதிகளுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். இதனால் இக் குளிர் பிரதேசங்களில் மலேரியா, டெங்கே[dengue] சிக்குன்னியா[chikungunya] போன்ற நோய்கள் பரவும்.

என்ன பயமாக இருக்கிறதா? இதோ இன்னும் சில :

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் [தமிழர்களின் தாயகம்] உள்ள பல கரையோரப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலில் மூழ்கிவிடும்.

பேராசிரியர் மோகன் முனசிங்கேயின் கருத்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின்[hardliners] கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்[...comments that are certain to draw the attention of hardliners from both sides of the warring fence]


மேலே உள்ள தகவல்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸின்[The Sunday Times] இவ்வார இதழில் [Sunday, April 29, 2007] வெளிவந்தவை. பூமியின் உஷ்ணமே[global warming] இவ் அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே. இவர் இவ் விடயத்தை மிகவும் மிகைப்படுத்துகிறாரா? அல்லது உண்மையாகவே சில தமிழ்ப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கப்போகிறதா என்பது எனக்குத் தெரியாது. யாராவது இத் துறையில் உள்ள வல்லுனர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கள் இலங்கை அரசியல்வாதிகளிடையேயும் மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதுதான் என் கவலை.
எனது அச்சம்?!!!! ஈழத்தில் நான் பிறந்த மண்[ஊர்] ஒரு கரையோரக் கிராமம். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" இருந்த என் கிராமமும் கடலில் மூழ்கிவிடுமோ என்பதும் என் அச்சங்களில் ஒன்று.

Saturday, April 28, 2007

மாமனிதர் சிவராம் [தாராக்கி] நினைவாக...

"இவர் தனது எழுத்துக்களால் தமிழரின் தேசியப் பிரச்சினையை உலக அரங்கிலே மிகவும் நேர்த்தியான முறையில் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்ற அப்பட்டமான பொய்ப்பரப்புரைகளை சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் மிகச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் அம்பலப்படுத்தினார். சிங்களப் பேரினவாத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபோதும், அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துநின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மக்களுக்கு ஓயாது அரசியல் விழிப்புணர்வூட்டி, தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார். அன்னார் ஆற்றிய பணி என்றுமே போற்றுதற்குரியது.

திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும்,விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும், தான் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மாமனிதர் சிவராம் அவர்களே சொல்லக் கேளுங்கள்[கீழே].


நீ விட்டுச் சென்ற பணி தொடரும்

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி
உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி
உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்
உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு
உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது
உன் இனமானம் வானை விட உயர்ந்தது
உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீரூற்றியது
உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!
உன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து
உன் கருத்துக்கு எதிர்க்கருத்து
உன் வாதத்துக்கு எதிர் வாதம்
முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்
உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே
நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே
உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழாது
என் மண் என்மக்கள் என் இனம்
என நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!
உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை
என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!
அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்
எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை
பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் தெளிவு!
அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!
உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்
என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடலைத்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது
உன் உயிரைத்தான் பகைவர்களால் பறிக்க முடிந்தது!
உன் கருத்துக்களை யாருமே அழிக்க முடியாது!
உன் நினைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!
அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!
என் எழுத்து கோல் மேல் ஆணை!
உன் ஆசைக் கனவுகளை நனவாக்குவேன்! நீ
சென்ற பாதையில் என் கால்கள் செல்லும்
நீ விட்டுச் சென்ற பணி தொடரும்!


இக் கவிதை திருமகள் என்பவரால் எழுதப்பட்டது. www.tamilnation.org எனும் இணையத்தளத்திலிருந்து இக் கவிதை எடுக்கப்பட்டது.