ஏன் தமிழ்நாடு இப்படி இருக்கிறது? --- தமிழகத்தவர்களிடம் ஒரு கேள்வி
இப் பதிவு தமிழக நில அமைப்பை பற்றிய எனது ஐயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக. எனவே தமிழக நில அமைப்பைத் தெரிந்தவர்கள் பதில் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் இதுவரை தமிழகத்தில் கால் பதிக்கவில்லை. எனவே தமிழக நில அமைப்புப் பற்றிய என் புரிதல் எல்லாம் இணையத்தளங்களில் பார்க்கும் புகைப்படங்கள், திரைப்படங்கள், மற்றும் ஊடகங்களில் படிப்பவை, பார்ப்பவை என்பவற்றுடன் சரி. நேரடி அனுபவம் இல்லை. ஆதலால்தான் இக் கேள்வி. சரி, கேள்விக்கு முதல், கீழே உள்ள சற்லைற்[satellite] மூலம் எடுக்கப்பட்ட தமிழக, இலங்கை வரைபடத்தைப்(?)[map - map க்கு என்ன தமிழ்]உற்று நோக்குங்கள்.
படத்தைப் பெரிதாக்கி நோக்க, படத்தின் மேல் அழுத்தவும்.
மேலே உள்ள படத்தை நல்ல வடிவாக உற்று நோக்கியாச்சா? இனிக் கேள்வி கேக்கலாமல்லோ? நல்லது. என் கேள்வி இதுதான். இப் படத்தில் தமிழகத்தின் அதிகமான நிலப்பரப்பு மரம், செடி ஒன்றும் இல்லாமல் [பச்சையாக இல்லாமல்] வறண்ட பாலைவனம் போல காட்சி தருகிறது. நிலம் மட்டும்தான் தெரிகிறது. உண்மையிலேயே தமிழகத்தின் அதிகமான நிலப்பரப்பு மரம் செடிகளற்ற [பச்சைப் பசேலென இல்லாமல்] வறண்ட பகுதியா? அல்லது நான் தான் வரைபடத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டேனா? தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.மிக்க நன்றி.
பதிவர் வவ்வால் அவர்களுக்கு,
உங்களின் பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள், "மாதக்கல் ,ஜாப்னா அருகே உள்ள இடமா" எனக் கேட்டிருந்தீர்கள். அதற்குப் பதில், ஓம்.
மாதகல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு கரையோர ஊர். அதுதான் நான் பிறந்து வளர்ந்த மண்ணும் கூட. மேலே உள்ள படத்தைப் பாருங்கள், மாதகல் எங்கே உள்ளது என்பதைச் சொல்கிறது.
முந்தி மாதகலில் இருந்து தமிழகத்தின் கோடிக்கரைக்கு நடந்து சென்று அங்கிருந்து சிதம்பரம் சென்று சிவனை வணங்குவார்கள் என்று எனது பாட்டனார் சொல்வார்கள். சின்னப் பெடியனாக இருந்த போது அதை நம்பினாலும், பின்னர் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது கோடித் திடல் பற்றி அறியும் போது பல தலைமுறைக்கு முன் இப்படி நடந்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
நீங்கள் "ஜாப்னா" [Jaffna] எனச் சொல்லியிருப்பது தமிழில் யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் இடம்.
மேலே உள்ள படத்தைப் நோக்கும் போது, ஈழம், தமிழகத்தில் இருந்து கடலால் பிரிக்க முன் தமிழகத்தின் எப்பகுதியுடன், ஈழத்தின் எப் பகுதிகள் இணைந்திருந்திருக்கும் என்று துல்லியமாகக் சொல்லக் கூடியதாக உள்ளது. வடிவாகப் படத்தைப் பாருங்கள். building blocks ஐ இணணப்பது போல மேலே படத்தில் உள்ள தமிழகத்தையும், ஈழத்தையும் சேர்த்து ஒட்டினால் மாதகல் கோடிக்கரையோடே சேரும். ம்ம்ம்...மிகவும் சுவாரசியமாக உள்ளது.
வவ்வால்,
நீங்கள் பின்னூட்டத்தில், "யானை இரவு என்ற பகுதி கொஞ்சம் உள்ளே இருக்கிறதா , பாண்ட் பெட்ரோ(பருத்தி துறை) அருகே, அதற்கு "elephant pass" என்று பெயர்" எனக் கேட்டிருந்தீர்கள். பல சொற்களில் விளக்கம் சொல்வதைவிட ஒரு படத்தைப் போட்டு விளக்குவது இலகு என்பதால், யாழ்ப்பாண மாவட்டத்தின் படத்தை இணைத்துள்ளேன். நீங்கள் சொல்லியிருந்த இடங்களையும், இன்னும் சில இடங்களையும் pink நிறத்தால் சுட்டிக்காட்டியுள்ளேன். படத்தை பெரிதாக்கி நோக்க படத்தில் கிளிக் செய்யவும்.
















